Friday, December 31, 2010

டைம்ஸ் சஞ்சிகையின் 2010ம் ஆண்டுக்கான நபர்…………




அமெரிக்காவிலிருந்து வெளிவருகின்ற உலகப்புகழ்பெற்ற சஞ்சிகையாக டைம்ஸ் சஞ்சிகை விளங்குகின்றது.

அந்தவகையில், டைம்ஸ் சஞ்சிகையினால் 2010ம் ஆண்டுக்கான நபராக Facebook சமூக இணையத்தள ஸ்தாபகர், மார்க் சூக்கேர்பேர்க் தெரிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

சமூக இணையத்தளங்களில் பிரதான இடம் வகிக்கின்ற Facebook இணையத்தளமானது 2004ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 04ம் திகதி அமெரிக்க நாட்டினைச் சேர்ந்த மார்க் சூக்கேர்பேர்க்(Mark Zuckerberg) அவர்களினால் ஸ்தாபிக்கப்பட்டது.

உலகளாவியரீதியில் Facebook இணையத்தளத்தில் 524 மில்லியனுக்கு மேற்பட்ட அங்கத்தவர்கள் இணைந்துள்ளனர், அத்துடன் உலக மக்களில் 14பேரில் ஒருவர் Facebook இணையத்தளத்தில் இணைந்துள்ளனர் என்பது அண்மைய புள்ளிவிபரமாகும்.

26 வயதான மார்க் சூக்கேர்பேர்க், உலகில் இளம் பணக்காரர்களில் ஒருவராகவும், பில்லியனராகவும் உயர் ஸ்தானத்தினை அடைந்தமைக்கு Facebook இணையத்தளமே பிரதான காரணமாகும்.

குறைந்த வயதில், டைம்ஸ் சஞ்சிகையினால் ஆண்டுக்கான நபராக தெரிவுசெய்யப்பட்டவர்களில் மார்க் சூக்கேர்பேர்க் 2ம் இடத்தினைப் பெறுகின்றார், இதற்கு முன்னர் 1927ம் ஆண்டு அமெரிக்காவின் லின்ட்பேர்க் குறைந்த வயதில், டைம்ஸ் சஞ்சிகையினால் ஆண்டுக்கான நபராக தெரிவுசெய்யப்பட்டவர்களில் முதன்மை இடம் வகிக்கின்றார். 3ம் இடத்தினை 1952ம் ஆண்டு தெரிவுசெய்யப்பட்ட பிரிட்டன் மகாராணி எலிசபெத் பெறுகின்றார்.

பிரிட்டன் மகாராணி எலிசபெத், கடந்த மாதம் Facebookல் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

அண்மையில் வெளியாகிய “The Social Network,” என்கின்ற திரைப்படமானது மார்க் சூக்கேர்பேர்க்கரின் வாழ்க்கையினை பற்றியதாகும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.



முன்னைய என் பதிவு - டைம்ஸ் சஞ்சிகையின் 2009ம் ஆண்டுக்கான நபர்…………

*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-


விலகிவிடு.........அரவணைத்துவிடு.........



2010ம் ஆண்டு எம் வாழ்வில் ஏற்படுத்திய வலிகளினைப் போக்கி, பிறக்கின்ற 2011ம் ஆண்டானது எம் வாழ்வில் மகிழ்ச்சிகளினை ஏற்படுத்தி மனதினை உன்வசப்படுத்துவாயாக........


வலையுலக நண்பர்கள், பதிவர்கள், வாசகர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் மகிழ்வுறுகின்றேன்.

***

Monday, December 27, 2010

2010இல் விளையாட்டு உலகம்......

இந்த வருடம் பல்வேறு உலகக் கிண்ண நிகழ்வுகளும், அதிகளவான நாடுகள் கலந்துகொண்ட பாரியளவான விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றன.

அந்தவகையில் 2010ம் ஆண்டின் சில முக்கிய விளையாட்டு நிகழ்வுகளின் தொகுப்பு இதோ........

குளிர்கால ஒலிம்பிக்... (பெப்ரவரி 12-28)



21வது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் கனடாவின் வான்கூவரில் பெப்ரவரி 12-28 வரை நடைபெற்றது. ஒலிம்பிக் வரலாற்றில் முதல் தடவையாக ஆரம்ப நிகழ்வுகள் மூடிய அரங்கில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

அமெரிக்கா(9/15/13), கனடா(14/7/5),ஜேர்மனி(10/13/7)ஆகிய நாடுகள் முதல் 3 இடங்களையும் பெற்றுக்கொண்டது.




சச்சின் சாதனை... (பெப்ரவரி 24)


சர்வதேச ஒரு நாள் போட்டியொன்றில் முதல் இரட்டைச்சதம் பெற்ற வீரராக சச்சின் சாதனை படைத்தார். (200* Vs தென்னாபிரிக்கா).



ஆடவர் உலகக் கிண்ண ஹொக்கி... (பெப்ரவரி 28-மார்ச் 13)

12 நாடுகள் பங்குபற்றிய 12 வது உலகக் கிண்ண ஹொக்கி சுற்றுப் போட்டி பெப்ரவரி28ம் திகதி முதல் மார்ச் 13வரை இந்தியாவின் புதுடில்லி நகரில் நடைபெற்றது.

இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய அணி ஜேர்மனி அணியினை 2-1 என்ற கோல் அடிப்படையில் வீழ்த்தி கிண்ணத்தை வெற்றிகொண்டது.

 T20 கிரிக்கெட் உலகக் கிண்ணம்... ( ஏப்ரல் 30 – மே 16)

மேற்கிந்திய தீவுகள் மண்ணில் நடைபெற்ற 3வது இருபதுக்கு இருபது கிரிக்கெட் உலகக் கிண்ணத்தினை இங்கிலாந்து அணி கைப்பற்றி புதிய சாதனையினைப் படைத்தது.

மகளிர் பிரிவில் நியூசிலாந்து அணியினை 3 ஓட்டங்களால் தோற்கடித்து அவுஸ்திரேலிய அணி இருபதுக்கு இருபது கிரிக்கெட் உலகக் கிண்ணத்தினை கைப்பற்றியது.


உலகக் கிண்ண கால்பந்தாட்டம்... (ஜூன் 10-ஜூலை 11)




2010ம் ஆண்டு ஜூன் 11ம் திகதி முதல் ஜூலை 11ம் திகதி வரை 32 நாடுகள் கலந்துகொண்ட உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் ஆபிரிக்க கண்டத்தில் முதன்முறையாக தென்னாபிரிக்காவில் நடைபெற்றன.

உலகக் கிண்ண கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் இரண்டு ஐரோப்பிய நாடுகளான நெதர்லாந்து மற்றும் ஸ்பெய்ன் அணிகள் மோதிக்கொண்டன. இறுதிப் போட்டியில் ஸ்பெய்னானது, நெதர்லாந்தினை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 19வது உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தில் சாம்பியன் பட்டத்தினை முதன்முறையாக தனதாக்கிக் கொண்டு புதிய வரலாற்றினைப் படைத்தது.

ஆசியக் கிண்ண கிரிக்கெட்... (ஜூன் 15-24)

இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய 4 நாடுகள் கலந்துகொண்ட 10வது ஆசியக் கிண்ண கிரிக்கெட்டில், இந்தியா, இலங்கையினை 81 ஓட்டங்களால் தம்புள்ளை ரங்கிரி மைதானத்தில் வெற்றிகொண்டு 5வது தடவையாக ஆசியக் கிண்ணத்தை கைப்பற்றியது.


முரளி ஓய்வு...



ஜூலை 18-22ம் திகதி வரை காலியில் நடைபெற்ற இந்திய அணியுடனான 1வது டெஸ்ட் போட்டியுடன் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் முரளிதரன் ஓய்வு பெற்றார்.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 800 விக்கட் மைல்கல்லினை அடைந்த ஒரேவீரர் முரளிதரன் ஆவார்.

மகளிர் உலகக் கிண்ண கால்பந்தாட்டம்... (ஜூலை 13 - ஆகஸ்ட் 1)

ஜேர்மனியில் நடைபெற்ற 16 நாடுகள் கலந்துகொண்ட 20 வயதுக்குட்பட்ட மகளிருக்கான 5வது உலகக் கிண்ண கால்பந்தாட்ட சுற்றுத்தொடரில் ஜேர்மனி, நைஜீரியாவினை இறுதிப்போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிகொண்டு 2வது தடவையாக சாம்பியனாகியது.


மகளிர் உலகக் கிண்ண ஹொக்கி... (ஆகஸ்ட் 29-செப்டெம்பர் 11)

12 நாடுகள் பங்குபற்றிய 12 வது மகளிர் உலகக் கிண்ண ஹொக்கி சுற்றுப் போட்டி, ஆர்ஜென்டீனா நாட்டில் ரொசாரியோ நகரில் நடைபெற்றது.

இறுதிப் போட்டியில் ஆர்ஜென்டீனா அணி நெதர்லாந்து அணியினை 4-2 என்ற கோல் அடிப்படையில் வீழ்த்தி கிண்ணத்தை வெற்றிகொண்டது.

 மகளிர் உலகக் கிண்ண றக்பி... (ஆகஸ்ட் 20-செப்டெம்பர் 5)
12 நாடுகள் பங்குபற்றிய 4 வது மகளிர் உலகக் கிண்ண றக்பி சுற்றுப் போட்டி, இங்கிலாந்து, லண்டன் நகரில் நடைபெற்றது.

இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி இங்கிலாந்து அணியினை 13-10 என்ற புள்ளி அடிப்படையில் வீழ்த்தி கிண்ணத்தை வெற்றிகொண்டது.




 1வது இளையோர் ஒலிம்பிக்... (ஆகஸ்ட் 14-26)




வரலாற்றில் முதல் தடவையாக இளையோர் ஒலிம்பிக்
சிங்கப்பூரில் நடைபெற்றது. இதில் 205 நாடுகளைச் சேர்ந்த 14-18வயது வரையிலான 3600 இளைஞர், யுவதிகள் பங்குபற்றினர்.


மகளிர் உலகக் கிண்ண கால்பந்தாட்டம்... (செப்டெம்பர் 5-25)

ரினிடாட் & ரொபாக்கோவில் நடைபெற்ற 16 நாடுகள் கலந்துகொண்ட 17 வயதுக்குட்பட்ட மகளிருக்கான 2வது உலகக் கிண்ண கால்பந்தாட்ட சுற்றுத்தொடரில் தென்கொரியா, ஜப்பானினை இறுதிப்போட்டியில் 5-4(3-3) என்ற கோல் கணக்கில் வெற்றிகொண்டு முதல் தடவையாக சாம்பியனாகியது.

பொதுநலவாய விளையாட்டு போட்டிகள்... (ஒக்டோபர் 3-14)

19வது பொதுநலவாய(கொமன்வெல்த்) விளையாட்டு போட்டிகள் இந்தியாவின் தலைநகர் புதுடில்லியில் ஒக்டோபர் 3ம் திகதி முதல் 14ம் திகதி வரை நடைபெற்றன.

பல்வேறு சர்ச்சைகளுக்குப் பின் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டு நிகழ்வில் அவுஸ்திரேலியா(74/55/48), இந்தியா(38/27/36), இங்கிலாந்து(37/59/46) ஆகிய நாடுகள் முதல் 3 இடங்களையும் பெற்றுக்கொண்டன.

ஆசிய விளையாட்டு போட்டிகள்... ( நவம்பர் 11-27)



16வது ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் குவாங்ஸூ நகரில் நடைபெற்றது.

ஆசிய விளையாட்டு நிகழ்வில் சீனா(199/119/98), தென்கொரியா(76/65/91), ஜப்பான்(48/74/94) ஆகிய நாடுகள் முதல் 3 இடங்களையும் பெற்றுக்கொண்டது.


ஆசிய விளையாட்டு வரலாற்றில் சீனா 1000+ தங்கப் பதக்கங்களைக் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


கிரிக்கெட்டில் .....

இந்திய அணி டெஸ்ட் தரப்படுத்தலில் முதலிடத்தினைப் பெற்றமை, அவுஸ்திரேலிய அணி டெஸ்ட் தரப்படுத்தலில் முதலிடத்தினை இழந்தமை, பங்களாதேஷ் அணி~ நியூசிலாந்து அணிக்கெதிராக ஒருநாள் தொடரில் முழுமை வெற்றியைப் பெற்றமை etc…..


***

Friday, December 24, 2010

பெயர் வரக் காரணம் என்ன?..... # 01



வெங்காயத்தை ஆங்கிலத்தில் "ஒணியன்"(Onion) என்று சொல்கின்றோம். இந்தச் சொல் எப்படி வந்தது என்று தெரியுமா?.......

"ஒணியோ" என்ற இலத்தீன் சொல்லில் இருந்துதான் "ஒணியன்" என்கின்ற ஆங்கிலச் சொல் வந்தது. "ஒணியோ" என்றால் இலத்தீன் மொழியில் பெரிய முத்து என்று அர்த்தம். வெங்காயம் பெரிய முத்தைப்போல காணப்பட்டதால் அது "ஒணியோ" என அழைக்கப்பட்டது.

*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*

இலங்கை, மற்றும் இந்திய சந்தை நிலைவரங்களை நோக்குகின்றபோது, அண்மைய நாட்களில் வெங்காயத்தின் விலை அதிகரித்துக்கொண்டே செல்கின்றது..... அந்தவகையில் வெங்காயம் தொடர்பில் ரசித்துச்சுவைத்த கதை ஒன்றினை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.

ஒரு நாட்டின் அரசரை சந்திப்பதற்காக, அயல் நாட்டிலிருந்து ஒருவன் விஜயம் மேற்கொண்டிருந்தான். அவன் அந்த பயணத்தில் தன்னுடன் வெங்காயங்களை எடுத்துச் சென்றிருந்தான். அரசனை சந்தித்தபோது, அவன் தான் எடுத்துச்சென்றிருந்த வெங்காயங்களை, அதன் அருமைபெருமைகளை எடுத்துக்கூறி அரசனுக்கு அன்பளிப்பாக வழங்கினான். இதுவரையும் இதுபோன்றதொரு அற்புதமான பொருளினை கேள்விப்பட்டதில்லை என்ற அரசன் அவனுக்கு கைமாறாக தங்கம், வெள்ளி, முத்து, வைடூரியங்களினை அன்பளிப்பாக வழங்கி அவனை மகிழ்ச்சிப்படுத்தி அனுப்பிவைத்தானாம்.



இந்த தகவலை கேள்வியுற்ற ஒருவன், அரசனைச் சந்திப்பதற்காக வெள்ளைப்பூண்டுகளை தன்னுடன் எடுத்து வந்தான். அரசனை சந்தித்த அவன் தான் எடுத்துச்சென்றிருந்த வெள்ளைப்பூண்டுகளை அதன் அருமைபெருமைகளை எடுத்துக்கூறி அரசனுக்கு அன்பளிப்பாக வழங்கினான். இதுவரையும் இதுபோன்றதொரு அற்புதமான பொருளினை கேள்விப்பட்டதில்லை என்ற அரசன் அவனுக்கு கைமாறாக வெங்காயங்களை அன்பளிப்பாக வழங்கி அனுப்பிவைத்தானாம்.

***

Wednesday, December 22, 2010

கடலின்கீழ் அமைக்கப்பட்ட முதல் தபால்நிலையம்....




உலகில், கடலின்கீழ் அமைக்கப்பட்ட முதலாவது தபால் நிலையம் பஹாமாஸ் நாட்டிலேயே அமைந்துள்ளது. விஞ்ஞான வசதிவாய்ப்பின் ஒரு அங்கமாக இந்த தபால் நிலையம் 1939ம் ஆண்டு, ஆகஸ்ட் 16ம் நாள் திறக்கப்பட்டது.

இந்த கடல்கீழ் தபால் நிலையமானது, ஐக்கிய அமெரிக்காவினைச் சேர்ந்த புகைப்படக்கலைஞர் ஜோன் எர்னெஸ்ட் வில்லியம்ஸ்சன்(1881-1966) அவர்களினால் உருவாக்கப்பட்டதாகும்.

கடல்கீழ் புகைப்படத்துறையின் முன்னோடியாகவும் வில்லியம்ஸ்சன், நினைவுகூரப்படுகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.




1965ம் ஆண்டு விநியோகிக்கப்பட்ட 5 ஷில்லிங் பெறுமதியான முத்திரை






அதேவேளை, பசுபிக் சமுத்திர தீவாகிய வனுவாட்டு தேசத்தில் 2003ம் ஆண்டு அமைக்கப்பட்ட, கடல்கீழ் தபால் நிலையத்தில் தபால் உறைகளும், முத்திரைகளும் வழங்கப்படுகின்றமை இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

***

Monday, December 20, 2010

தமக்கென சொந்தமான தேசியகீதம் இல்லாத நாடு......

சுவாரஷ்சியமான பல்சுவைத்தகவல்களை கொண்ட பதிவு உங்களுக்காக......



தமக்கென சொந்தமான தேசியகீதம் இல்லாத ஒரே நாடாக சைப்பிரஸ் விளங்குகின்றது. சைப்பிரஸ் நாடானது கிரேக்க நாட்டின் தேசியகீதத்தினையே பயன்படுத்துகின்றது.

உலகில் அதிக வரிகளினைக்(158வரிகள்) கொண்ட தேசியகீதம் கிரேக்க நாட்டினுடையதே என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.


கிரேக்கம்

------------------------------------------------------

விடை பெற்றது "அட்லாண்டிஸ்" விண்கலம்


ஐக்கிய அமெரிக்காவின் "அட்லாண்டிஸ்" விண்கலம் தனது இறுதி விண்வெளிப் பயணத்தினை கடந்த மே 26ம் திகதியுடன் நிறைவுசெய்து கொண்டது. 1985ம் ஆண்டு ஒக்டோபர் 03ம் திகதி தனது முதல் விண்வெளிப் பயணத்தினை மேற்கொண்ட அட்லாண்டிஸ் விண்கலம் 32 விண்வெளிப் பயணங்களையும், 195 மில்லியன் கிலோமீற்றருக்கும் அதிகமான தூரம் பயணம் செய்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

------------------------------------------------------

அண்மைய மருத்துவ ஆய்வுத் தகவல்கள்.........
 கேம்பிரிட்ஜ் வெல்கம் நிதிய சன்கேர் நிறுவக ஆராய்ச்சியாளர் பீற்றர் கேம்பெல் தலைமையில் மேற்கொண்ட ஆய்வின் பிரகாரம், நுரையீரல் புற்று நோயினை அதிகரிப்பதற்கு 15 சிகரெட்டுக்கள் போதுமானதாம் என கண்டறிந்துள்ளனர்.

 ஐக்கிய ராச்சியத்தின் அவேட்ரேய் பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த உளவியலாளர் மைக் டவ்மேன் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட ஆய்வின் பிரகாரம் ஒருவரின் தட்டச்சு பரிமாணத்தினைக் கொண்டு அவரின் அழுத்தங்களினை அறிந்துகொள்ளலாம் எனக் கண்டறிந்துள்ளனர்.

--------------------------------------------------------------

சச்சின் 50.....!!!


இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர், டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் தனது 50வது சதத்தினை தென்னாபிரிக்க அணிக்கெதிராக நேற்று பதிவுசெய்து உலக சாதனை படைத்தார். தனது 175வது டெஸ்ட் போட்டியில் சச்சின், இந்த மைற்கல்லினை அடைந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

***

Thursday, December 16, 2010

மனித உடலுக்கு இதயம் ஆற்றுகின்ற உன்னத தொழிற்பாடுகள்




நாம் ஒரு நாளைக்கு 23000 தடவைகள் சுவாசிக்கின்றோம். அதன் மூலமாகவும் 450 கன அடி வளியினை உள்ளே எடுத்து வெளியே விடுகின்றோம். அந்த வளியிலிருந்து ஒட்சிசனை எடுத்து, உடம்பின் எல்லா பாகங்களுக்கும் அனுப்பும் வேலையை இதயம் இடைவிடாமல் செய்து கொண்டிருக்கின்றது.

நாளொன்றுக்கு ஒரு இலட்சம் தடவைகள் துடிக்கின்ற நமது இதயம் சராசரியாக 70 ஆண்டுகள் உயிர்வாழும் ஒரு மனிதனுக்கு, கிட்டத்தட்ட 250 கோடி தடவைகள் இதயம் துடிக்கின்றது. 24 மணி நேரத்தில், 20000 லீற்றர் இரத்தத்தை இதயம் பாய்ச்சுகின்றது. இதயம் ஒரு முறை இரத்ததை பாய்ச்சுகின்றபோது, 500 மில்லிலீற்றர் இரத்தம் உடலின் பாகங்களில் பாய்ச்சப்படுகின்றது.


***

Monday, December 13, 2010

முத்தை உண்ணும் ஒரே உயிரினம்........

உயிரினங்கள் சிலவற்றினைப் பற்றிய சுவாரஷ்சியமான தகவல்கள்.........

 உலகில், பாலூட்டிகளில் மிகப்பெரிய உயிரினம் நீலத்திமிங்கிலமாகும்.
பிறக்கும்போது இதன் நிறை 5 தொன்களாகும். பூரண வளர்ச்சியடைந்த பின்னர் இதன் நிறை 150 தொன்களினை விடவும் அதிகமாகும்.

 நியூசிலாந்து நாட்டின் தேசியப் பறவை கிவி பறவை ஆகும். இவை வருடத்துக்கு ஒரு முட்டையினையே இடுகின்றன.

 நவரத்தினங்களில் ஒன்றான முத்தை உண்ணும் ஒரே உயிரினம் அன்னம் மட்டும்தான்.




 உலகில், உயிரினங்களிலேயே மிகப்பெரிய முட்டையினை இடுவது சுறா மீன் ஆகும்.




 குதிரையின் காதினை விடவும் கழுதையின் காது நீளமானதாகும்.

 வீட்டு இலையான்களின் சராசரி ஆயுட்காலம் 14 நாட்கள் ஆகும்.

 பாம்புகளின் விஷத்தில் 90% புரதம் உள்ளடங்கியுள்ளது.

 சுறா மீன்கள் 100 வருடங்களுக்கும் அதிகமாகவும் வாழக்கூடியவையாகும்.

***

Friday, December 10, 2010

தனக்கு கிடைத்த சமாதான நோபல் பரிசினை நிராகரித்தவர்.....

ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் 10ம் திகதி சமாதானத்துக்கான நோபல் பரிசானது நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

அந்தவகையில் 2010ம் ஆண்டுக்கான சமாதான நோபல் பரிசானது சீனா நாட்டினைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் லியு ஸியயோபோவுக்கு அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். இவர் தற்சமயம் சிறை வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

லியு ஸியயோபோ

சமாதான நோபல் பரிசு தெரிவானது சில சந்தர்ப்பங்களில் அரசியல் சர்ச்சைகளுக்குள் சிக்கிக்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும். அந்தவகையில் இந்த வருடத்துக்கான சமாதான நோபல் பரிசும் அரசியல் சர்ச்சைகளுக்குள் ஆட்பட்டுள்ளது.

இன்றைய தினம் சமாதான நோபல் பரிசு வழங்கும் நிகழ்வினை சீனா, இலங்கை உட்பட்ட சில நாடுகள் பகிஷ்கரிக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

தனக்கு கிடைத்த சமாதான நோபல் பரிசினை நிராகரித்தவர் வியட்நாம் அரசியல்வாதி லி டுக் தோ ஆவார்.

லி டுக் தோ


1973ம் ஆண்டுக்கான சமாதான நோபல் பரிசானது ஐக்கிய அமெரிக்காவின் இராஜங்க செயலாளர் ஹென்ரி கிஸ்ன்கர் மற்றும் லி டுக் தோ ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். இவர்கள் இருவரும் வியட்நாம் சமாதான இணக்கப்பாட்டுக்கு பணியாற்றியமை குறிப்பிடத்தக்கதாகும்.

சமாதான நோபல் பரிசினை ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலையில் தான் இல்லை என்று லி டுக் தோ அறிவித்தார், இதற்கான காரணமாக அவர் வியட்நாமின் நிலையினை எடுத்துரைத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

வியட்நாம் வன்முறையானது(1959-1975) வட வியட்நாமுக்கும், அமெரிக்க ஆதரவுபெற்ற தென் வியட்நாமுக்கும் இடையே நடைபெற்றமை குறிப்பிடத்தக்கதாகும். தென் வியட்நாம் & அமெரிக்க படையினர் போரில் தோற்கடிக்கப்பட்டதுடன், வட வியட்நாம் கம்யூனிஸ் அரசாங்கத்தின்கீழ் வியட்நாம் ஒற்றுமைப்பட்டவுடன் போர் முடிவுக்கு வந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

***

Thursday, December 9, 2010

அம்மாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்........




இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் அன்பின் அம்மாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.




அதேவேளை மனதிற்கு கவலையான தகவலொன்றினை உங்களுடன் பகிர்கின்றேன்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், எதிர்பாராத விபத்துச் சம்பவமொன்றின் காரணமாக அம்மா பாதிப்புக்குள்ளானார். இதன் காரணமாக சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

எங்கள் வாழ்வின் முன்னேற்றத்துக்கு ஆதாரமாக விளங்கும் அன்பின் அம்மா விரைவில் நலமடைய பிரார்த்திக்கின்றேன்.

***

Sunday, December 5, 2010

அமெரிக்காவின் ஒரேயொரு சமஷ்டி ஜனாதிபதி.......

உலகப் புகழ்பெற்றவர்கள் தொடர்பிலான சில சுவையான தகவல்கள் உங்களுக்காக.......

 1933ம் ஆண்டு "மிக்கி மவுஸ்" காட்டூன் கதாபாத்திரமானது, தனது விசிறிகளிடமிருந்து 800,000 கடிதங்களினைப் பெற்றுக்கொண்டது.




 மாவீரன் நெப்போலியன் தனது போர் திட்டங்களினை மணல் திட்டுக்களிலேயே மேற்கொள்வாராம்.

 கியூபாவில் சோசலிச ஆட்சியை நிறுவிய பெருமைக்குரிய புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோ ஆவார். இவர் 1944ம் ஆண்டு கியூபா நாட்டின் மிகச்சிறந்த பாடசாலை மெய்வல்லுன வீரராக தெரிவுசெய்யப்பட்டார்.


 மேரி ஸ்டூவட்(1542 – 1567), ஸ்கொட்லாந்து நாட்டின் இளவரசியாக முடிசூட்டப்பட்டபோது அவரின் வயது வெறும் 6 நாட்களேதான் ஆகும்.

 ஐக்கிய அமெரிக்க வரலாற்றில் சமஷ்டி கட்சியிலிருந்து ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட ஒரேயொருவர் ஜோன் அடம்ஸ்(1735-1826).... இவர் ஐ.அமெரிக்காவின் 2வது ஜனாதிபதியாவார்.

 விமானத்தினை உலகுக்கு அறிமுகப்படுத்திய ரைட் சகோதரர்களில் ஒருவராகிய ஓர்வில் ரைட், தன் வீட்டில் இருந்த கோழி இடும் முட்டைகளில் தொடர் இலக்கத்தினை எழுதுவாராம். பின்னர் கோழிகள் முட்டை இட்ட ஒழுங்கின்பிரகாரமே அவற்றினை உண்பாராம்.




 1558-1603ம் ஆண்டுவரை இங்கிலாந்து நாட்டின் மகாராணியாக விளங்கிய 1ம் எலிசபெத் ரோஜாப் பூக்கள் தொடர்பில் பயம் கொண்டவராம்.

***

Wednesday, December 1, 2010

உலகில் மிகப்பெரிய மணல் தீவு.......



உலகில் மிகப்பெரிய மணல் தீவாக அவுஸ்திரேலியாவின் பிரேசர் தீவு விளங்குகின்றது. பிரேசர் தீவு, அவுஸ்திரேலியாவின் 6 வது மிகப்பெரிய தீவாகவும் விளங்குகின்றது. அத்துடன் பிரேசர் தீவு, குயின்ஸ்லாந்து மாநிலத்தின் மிகப்பெரிய தீவாகவும், அவுஸ்திரேலியாவின் கிழக்கு கரையோரத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய தீவாகவும் விளங்குகின்றது.

பிரேசர் தீவு, அவுஸ்திரேலியாவின் கிழக்கு கரையோரத்திற்கு அண்மையில் அமைந்துள்ளதுடன் பிறிஸ்பேன் நகருக்கு வடக்காகவும் அமைந்து காணப்படுகின்றது.
பிரேசர் தீவு, அண்ணளவாக 123 கிலோமீற்றர் நீளமானதுடன், 22கிலோமீற்றர் அகலமானதுமாக 184,000 ஹெக்டெயர்கள்(1840 km²) பரந்து காணப்படுகின்றது.
வர்ணமயமான பல்வேறு மணற் குன்றுகள் பிரேசர் தீவுக்கு அழகு சேர்க்கும் வண்ணம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.




பிரேசர் தீவில் அமைந்துள்ள மணற் குன்றுகள், கடல் மட்டத்திலிருந்து 240மீற்றரிலும் அதிகமான உயரம் கொண்டவையாகும்.

200 மீற்றருக்கும் அதிகமான உயரமுடைய மணற் குன்றுகளில் உயரமான மழைக்காடுகள் காணப்படுகின்ற உலகின் ஒரெயொரு இடம் பிரேசர் தீவுதான் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பிரேசர் தீவில், தங்குதடையற்ற நீண்ட வெள்ளை மணற்கரைகள், ஆச்சரியத்தக்க நிறமுள்ள மணல் குன்றுகளினால் அசாதாரணமான அழகு நிறைந்த இடமாக காட்சியளிக்கின்றன.

பிரேசர் தீவில் 100இற்கும் மேற்பட்ட நன்னீர் ஏரிகள் அமைந்துள்ளதுடன், உலகில் காணப்படுகின்ற தூய்மையான ஏரிகளில் சில, பிரேசர் தீவிலேயே அமைந்துள்ளன. இங்கே காணப்படுகின்ற சில ஏரிகள் வெள்ளை மணற் கரைகள் சூழ தேயிலையின் நிறத்திலும், ஏனையவை தெளிவாகவும், நீல நிறத்திலும் அமைந்துள்ளன.

மத்திய நிலப்பகுதியிலிருந்து பிரேசர் தீவானது, பிரமாண்டமான மணற்பாங்கான ஜலசந்தியினால் பிரிக்கப்படுகின்றது. இந்த பிரதேசமானது ராம்சார் பிரகடனத்தில் ஈர நிலங்களில் மிக முக்கிய இடமாக குறித்துக் காட்டப்பட்டுள்ளது.

பல்வேறு சுதேச உயிரினங்களின் வாழ்விடமாகவும் பிரேசர் தீவானது விளங்குகின்றது. இங்கே பல்வேறு வகையான பாலூட்டிகள், ஊர்வன, ஈரூடக வாழிகள், பறவைகள், மீனினங்கள் வாழ்கின்றன.



மேலும், பிரேசர் தீவில் வாழ்கின்ற டிங்கோ(Dingo) நாய்கள் பொதுவான சிறப்பிடம் பெறுகின்றன. டிங்கோ நாய்களின் எண்ணிக்கையானது தற்சமயம் வீழ்ச்சியடைந்து செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.


இயற்கை சுற்றுலா இடமாக விளங்கும் பிரேசர் தீவு 1992ம் ஆண்டு யுனெஸ்கோ அமையத்தினால் உலகப் பாரம்பரிய / மரபுரிமை இடங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


நண்பர்களே, அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்வதற்கு வாய்ப்புக்கள் கிடைத்தால் பிரேசர் தீவுக்கும் மறக்காமல் ஒருதடவையேனும் சென்றுதான் பாருங்களேன்.... (எனக்கும் ஆசைதான்.......)


***
Blog Widget by LinkWithin