Thursday, April 29, 2010

பத்திரிகையில் என் பதிவு # 2

என் வலைப்பூவில் பதிவிட்ட பெண் பிரட்மன் காலமானார் என்ற பதிவானது இலங்கையிலிருந்து வெளிவருகின்ற மெட்ரோ நியூஸ் பத்திரிகையில் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் பெண் பிரட்மன் காலமானார் என்கின்ற இந்தப் பதிவானது யூத்புல் விகடனில் குட் ப்ளாக்ஸ் பகுதியில் பிரசுரமாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.


(நன்றி - மெட்ரோ நியூஸ் 17.02.2010)

***

Tuesday, April 27, 2010

உலகில் மிக ஆழமான படிக்கிணறு

உலகில் படிகளைக் கொண்டமைந்த மிகவும் ஆழமான கிணறு இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ளதாம். சாண்ட் வாஃரி என்றழைக்கப்படுகின்ற இந்த படிக்கிணறு ஜெய்ப்பூருக்கு அண்மையிலுள்ள வஹனெரி என்ற கிராமத்தில் அமைந்துள்ளதாம். இந்த படிக்கிணறு 9ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகவும், இது 3500 நெருக்கமான படிகளையும் கொண்டுள்ளதுடன், 13 தளங்களையும் கொண்டமைந்துள்ளதுடன், 100அடி ஆழமும் உடையதாகும்.

இது பண்டைய கால கட்டக்கலையின் அற்புதமான பெருமைகளை எடுத்துகாட்டுவதற்கான ஒரு சிறந்ததொரு உதாரணமாகும் எனலாம்.











***

Sunday, April 25, 2010

150வது பதிவு: இனிப்புச் சுவையில் நோயெதிர்ப்பு மாத்திரைகள்

இது எனது 150வது பதிவாகும். .......................


ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 25ம் திகதி உலக மலேரியா விழிப்புணர்வு தினமாக அனுஷ்டிக்கப்படுகின்றது. உலக மலேரியா விழிப்புணர்வு தினமானது, முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்சினுடைய எண்ணக்கருக்கிணங்க 2007ம் ஆண்டு முதல் அனுஷ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.


  • மலேரியா நோயின் காரணமாக ஆபிரிக்க கண்டத்திலுள்ள நாடுகள் பெருமளவில்பாதிக்கப்பட்டுள்ளன.
  • மலேரியா நோயின் காரணமாக வருடாந்தம் 1மில்லியனுக்கும் அதிகமானமக்கள் பலியாகின்றனர். இதில் அதிகளவான குழந்தைகள் உப சகாராபிராந்தியத்தினைச் சேர்ந்தவர்களாவர்.
  • மலேரியா நோயின் காரணமாக மரணிக்கின்றவர்களில் 90%க்கும்அதிகமானவர்கள் ஆபிரிக்காவின் உப சகாரா பிராந்தியத்தினைச்சேர்ந்தவர்களாவர்.
  • ஆபிரிக்காவில், மலேரியா நோயின் காரணமாக ஏற்படுகின்ற பொருளாதாரஇழப்புக்கள் வருடாந்தம் 12பில்லியன் டொலர்களுக்கும் அதிகமாகும்.

உலகில் மலேரியா நோயின் 30செக்கன்களுக்கொரு குழந்தை பலியாகின்றது என்பதனைக் கொண்டு மலேரியா நோயின் பாதிப்பினை உணர்ந்துகொள்ள முடிகின்றது. அந்தவகையில் நுளம்பினால் பரவுகின்ற தடுக்கக்கூடியதும், குணப்படுத்தக்கூடியதுமான மலேரியா நோயினை உலகிலிருந்து முற்றாக ஒழிப்பதற்கு அரசாங்கங்கள் வினைத்திறனான நடவடிக்கைகளினை எடுப்பது அவசியமாகும்.

%%%>>>%%%%>>>>%%%%%>>>>>%%%%%%


இனிப்புச் சுவையில் மலேரியா நோயெதிர்ப்பு மாத்திரைகள்

மலேரியா நோயின் பாதிப்பிலிருந்து விடுதலை பெறுவதற்காக தற்சமயம் செரி பழ சுவையுடனான மலேரியா நோயெதிர்ப்பு மாத்திரைகள் வடிவமைத்து வழங்குவது அதிக வினைத்திறனானது என தன்சானியாவின் இபகரா சுகாதார அமைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் மலேரியா நோயின் பாதிப்பினை எதிர் நோக்கியுள்ள குழந்தைகளுக்கு விசேட பாதுகாப்பினை வழங்கமுடியும் என தெரிவிக்கப்படுகின்றது. ஏனெனில் இது வக்சீன்களைக் காட்டிலும் இலகுவானதாகவும், வினைத்திறனாக இருப்பதனாலுமாகும் என சுகாதார வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

***

Wednesday, April 21, 2010

உலகில் எரிமலை வெடிப்புக்கள் ஏற்படுத்திய பாதிப்புக்கள்




அண்மையில் ஐஸ்லாந்து நாட்டில் உறைந்த பனி ஏரியொன்றில் வெடித்த எரிமலையின் [Eyjafjallajökull] காரணமாக உலகளாவிய ரீதியில் ஏராளமான பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

1) பொருளாதார பாதிப்புக்கள்
எரிமலை வெடிப்பின் காரணமாக ஏற்பட்ட சாம்பல் புகைப்பரம்பலின் காரணமாக ஏராளமான விமான போக்குவரத்து நிறுவனங்கள் தமது சேவையினை தொடரமுடியாத நிலை ஏற்பட்டது. இதனால் விமான போக்குவரத்து நிறுவனங்கள் பெரும் நட்டங்களை எதிர்நோக்கியமை குறிப்பிடத்தக்கதாகும். குறிப்பாக விமானங்கள் பறக்காததால் எரிபொருள் செலவு இருக்கவில்லை என்றாலும் விமான போக்குவரத்து நிறுவனங்கள் ஊழியர்களுக்கான சம்பளம், விமானத்துக்கான வாடகை கொடுப்பனவுகள் மற்றும் கடன் வாங்கிய தொகைக்கான வட்டிக்கொடுப்பனவுகள் ஆகியவற்றினை எதிர்கொண்டன. மேலும் விமான போக்குவரத்து நிறுவனங்கள் பங்குச்சந்தையில் பெரும் நெருக்கடிகளினை எதிர்கொண்டன.

காய்கறிகள்,பழங்கள்,பூக்கள் போன்றவற்றிலிருந்து கிடைக்கின்ற வருமான மூலங்களில் தங்கியிருக்கின்ற நாடுகள் பெரும் நட்டங்களை எதிர்நோக்கியமை குறிப்பிடத்தக்கதாகும். மேலும் காய்கறிகள், பழங்கள், பூக்கள் போன்றவை இலகுவாக பழுதடையக்கூடியதாக இருப்பதனால் இவற்றுக்கு விமான போக்குவரத்து நிறுவனங்கள் நஷ்டஈடுக்கொடுப்பனவுகளை வழங்க வேண்டிய நிலையும் வரலாம்.

விமான போக்குவரத்து நிறுவனங்கள், கடந்த வருடம் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீட்சி பெறும் முன்னரே மேலும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.



2) சுகாதாரப் பாதிப்புக்கள்
எரிமலை வெடிப்பின் காரணமாக ஏற்பட்ட சாம்பல் புகைப்பரம்பலின் காரணமாக சுகாதாரப்பிரச்சினைகள் அதிகரிக்கும் என்றும், ஆஸ்மா மற்றும் ஏனைய சுவாசப்பை நோய் உள்ளவர்களுக்கும் இது மோசமான பாதிப்புக்களினை ஏற்படுத்தலாம் என ஐ. நா. சுகாதார அமையம் தெரிவித்துள்ளது.



3) சுற்றுச்சூழல் பாதிப்புக்கள்
உறைந்த பனி ஏரியொன்றில் இந்த எரிமலை வெடித்தமையால், நெருப்புபிழம்பின் சக்தியும் பனிக்கட்டியும் சேர்ந்து வளிமண்டலத்தில் வெளியிட்ட தூசிப்புகை வளிமண்டலத்தில் 10கி.மீ தூரம் வரை பரவியுள்ளதாம்.

அது வளிமண்டலத்தில் பரவி மெதுமெதுவாக மீண்டும் பூமியில் படிந்துவிடும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.



ஐஸ்லாந்தில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பு தொடர்பில் ஆறுதல்கொள்ளக்கூடிய ஒரே விடயம் யாதெனில் இதன் காரணமாக எந்தவிதமான உயிர்ச்சேதங்களும் ஏற்படாமையாகும்.


உலகில் அதிகளவான உயிர்சேதங்களினை ஏற்படுத்திய சில எரிமலை வெடிப்புச் சம்பவங்கள்;

1) இந்தோனேசியாவில், 1815ம் ஆண்டு ஏற்பட்ட ரம்வோரா எரிமலை வெடிப்பின் காரணமாக 92000 மக்கள் பலியாகினர்.

2) இந்தோனேசியாவில், 1883ம் ஆண்டு ஏற்பட்ட கிராகிட்ரோ எரிமலை வெடிப்பின் காரணமாக 36000 மக்கள் பலியாகினர்.


3) கரீபியன் தீவிலுள்ள மாரினிட்கியுவில், 1902ம் ஆண்டு ஏற்பட்ட பீலே எரிமலை வெடிப்பின் காரணமாக 29000 மக்கள் பலியாகினர்.

4) கொலம்பியாவில், 1985ம் ஆண்டு ஏற்பட்ட நிவாடோ டெல் றூயீஷ் எரிமலை வெடிப்பின் காரணமாக 23000 மக்கள் பலியாகினர்.

5) இத்தாலியில், கி.பி79ம் ஆண்டு ஏற்பட்ட வெசூவியஸ் எரிமலை வெடிப்பின் காரணமாக 25000 மக்கள் பலியாகினர். இந்த மலை இறுதியாக வெடித்தது 1944ம் ஆண்டில்.

6) ஜப்பானில், 1792ம் ஆண்டு ஏற்பட்ட உன்சென் எரிமலை வெடிப்பின் காரணமாக 15000 மக்கள் பலியாகினர்.

7) இந்தோனேசியாவில், 1586ம் ஆண்டு ஏற்பட்ட கெலுட் எரிமலை வெடிப்பின் காரணமாக 10000 மக்கள் பலியாகினர்.

8) ஐஸ்லாந்தில், 1783ம் ஆண்டு ஏற்பட்ட லாகி எரிமலை வெடிப்பின் காரணமாக 9350 மக்கள் பலியாகினர். இந்த எரிமலை வெடிப்பின் காரணமாக 25%ஆன மக்கள் பலியாகினர்.

***

Monday, April 19, 2010

தாயகம் திரும்ப வேண்டுமாயின்.......

வருகின்ற ஜூன் மாதம் தென்னாபிரிக்காவில் உலகக் கிண்ண உதைபந்தாட்ட போட்டிகள் ஆரம்பமாகவுள்ளன என்பதனை நீங்கள் அறிந்ததே. அந்தவகையில் உலகக் கிண்ண உதைபந்தாட்ட வரலாற்றில் நடைபெற்ற ஒரு சுவையான சம்பவம் தொடர்பாக உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.



சயர் நாடானது 1974ம் ஆண்டு மேற்கு ஜேர்மனியில் நடைபெற்ற உலகக் கிண்ண உதைபந்தாட்ட போட்டிகளுக்கு அதிர்ச்சிதரும் வகையில் தகுதிபெற்றது. கறுப்பு ஆபிரிக்க நாடுகளில், உலகக் கிண்ண உதைபந்தாட்ட போட்டிகளில் பங்குபெறும் தகுதியினைப் பெற்ற முதல் நாடும் சயர் ஆகும். சயர் நாட்டின் ஆளும் தலைவரான மொவுட்டு சிசி சீகோ தமது ஆயுதப்படையினரூடாக, அந்த நாட்டு உதைபந்தாட்ட அணியினருக்கு கட்டளையொன்றினைப் பிறப்பிக்கின்றார் .


மொவுட்டு சிசி சீகோ

சயர் நாட்டின் இறுதி குழுப்போட்டியானது பிரேசில் நாட்டு அணியுடனான போட்டியாக இருந்தது. அந்தப் போட்டியில் 4 அல்லது அதற்கு மேற்பட்ட கோல்களினால் தோல்வியுற்றால் வீரர்கள் நாடு திரும்பமுடியாது என கட்டளை பிறப்பிக்கின்றார்.




இதனால் போட்டியானது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்தப் போட்டியில் பிரேசில் அணியானது 3-0 என சயர் அணியினை வீழ்த்தியதன் காரணமாக, சயர் நாட்டின் ஆளும் தலைவர் தமது நாட்டு வீரர்களினை தாயகம் திரும்ப அனுமதித்தாராம் .
***

Friday, April 16, 2010

உலகில் அதிகம் பேர் பயப்படும் முதல் 10 விடயங்கள்

இந்த உலகில் வாழும் மக்களில் ஒவ்வொருவருக்கும் ஏதாவதொன்று தொடர்பான பயம்[phobia] ஆட்டிப்படைத்துக் கொண்டேயிருக்கும். அந்தவகையில் உலகில் அதிகம் பேர் பயப்படும் முதல் 10 விடயங்கள் வருமாறு.......

# 10) Necrophobia- மரணத்துக்கான பயமே Necrophobia எனப்படுகின்றது. அதாவது மரணம்,மரணத்துடன் தொடர்பான விடயங்கள், சவப்பெட்டிகள், பிணங்கள் ஆகியவைகள் தொடர்பான பயங்களினைக் குறிப்பிடலாம்.

# 9) Brontophobia- இடி மற்றும் மின்னலுக்கான பயம். இதனை Astraphobia எனவும் குறிப்பிடலாம். இடி,மின்னல் ஏற்படும் போது மக்கள் தம்மையறியாமலே பாதுகாப்பினை தேடிக்கொள்கின்றனர்.



# 8) Carcinophobia- புற்று நோய்க்கான பயமே இதுவாகும். புற்று நோய் என்பது ஒரு தொற்று நோய் அல்ல என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனாலும் ஒரு புற்று நோயாளியை தொட்டதன் காரணமாக தனக்கும் நோய்வரும் என பயப்படுவதே இதுவாகும்.

# 7) Emetophobia- வாந்திக்கான பயமே இதுவாகும்.

# 6) Acrophobia - உயரங்களுக்கான பயமே இதுவாகும்.

# 5) Claustrophobia- மூடிய வெளிகளுக்கான பயமே இதுவாகும். அதாவது மிக குறுகலான இடங்கள் தொடர்பில் ஏற்படுகின்ற பயமே இதுவாகும். லிப்ட் பயணங்களிலினை தவிர்த்தல், சிறிய அறைகளிலிருந்து விலகியிருத்தல் etc…

# 4) Agoraphobia- திறந்த வெளிகளுக்கான பயமே இதுவாகும். ஏதாவதொரு இடத்தில் அல்லது சூழ்நிலையில் தவிர்க்கின்ற போது, வெளியேறுவதற்கு அல்லது உதவிகள் ஏதாவது கிடைக்காதவிடத்து அல்லது வெளியேறுவதற்கான பாதைகள் அல்லது முறைகள் சிக்கலாகின்ற போது ஏற்படுகிற பயமே இதுவாகும்.

# 3) Aeruophobia- பறப்பதற்கான பயமே Aeruophobia என அழைக்கப்படுகின்றது. விமானங்களில் பயணம் செய்வதற்கு பயப்படுவதனைக் இது குறிக்கின்றது. இந்த வகையான பயமானது அடிக்கடி Claustrophobia உடன் பொருந்துகின்றது.

# 2) Social Phobia - சமூகத்தில் எதிர்மறையாக மதிப்பிடுகின்ற பயமே Social Phobia என அழைக்கப்படுகின்றது. இது பல்வேறுபட்ட காரணங்களினால் ஏற்படுகின்றது. மற்றவர்களினால் ஆழ்ந்து பரிசோதனை செய்யப்படல் அல்லது சமூக சூழ்நிலைகளினால் எதிர்மறையான மதிப்பீட்டினைப் பெறல், ஒருவரின் சொந்த செயற்பாடுகளின் காரணமாக தாழ்த்தப்படுவதாக உணருதல் போன்றவையாகும்.

# 1) Arachnophobia - சிலந்திகளுக்கான பயமே Arachnophobia என அழைக்கப்படுகின்றது. இதேவேளை சிலந்திகளின் படங்களுக்கான பயம் Chronicarachnophobia என அழைக்கப்படுகின்றது.



***

Monday, April 12, 2010

விமான விபத்துக்களில் பலியான உலக அரசியல் தலைவர்கள்



கடந்த 10ம்திகதி ரஷ்யாவில் இடம்பெற்ற விமானவிபத்தொன்றில் போலந்து நாட்டின் ஜனாதிபதி லெச் கக்ஸின்ஸ்கி உட்பட மேலும் 95 பேர் பலியாகினர். அந்தவகையில் விமான விபத்துக்களில் பலியான உலக நாடுகளின் அரசியல் தலைவர்கள் தொடர்பான விபரங்கள்.....

1) அர்விட் லிண்ட்மன் - சுவீடன் நாட்டின் பிரதமர் [1906-11 & 1928-1930 வரை பதவி வகித்தவர்] - 1936ம் ஆண்டு விமான விபத்தில் பலியானார்.

2) வல்டிசிலாவ் சிகோஸ்கி- போலந்து நாட்டின் பிரதமர் - 1943ம் ஆண்டு விமான விபத்தில் பலியானார்.

3) ரமொன் மக்சசெய்- பிலிப்பைன்ஸ் நாட்டின் ஜனாதிபதி -1957ம் ஆண்டு விமான விபத்தில் பலியானார்.

4) வர்திலெமி வொகண்டா - மத்திய ஆபிரிக்க குடியரசின் 1வது பிரதமர் - 1959ம் ஆண்டு விமான விபத்தில் பலியானார்.

5) அப்துல் சலாம் அரிப் - ஈராக் நாட்டின் ஜனாதிபதி - 1966ம் ஆண்டு ஹெலிகொப்டர் விபத்தில் பலியானார்.

6) ரெனி வெரியன்ரோஷ் - பொலிவியா நாட்டின் ஜனாதிபதி - 1969ம் ஆண்டு ஹெலிகொப்டர் விபத்தில் பலியானார்.

7) ஜொய்ல் ரகோடொமலாலா- மடகஸ்கார் நாட்டின் பிரதமர் - 1976ம் ஆண்டு விமான விபத்தில் பலியானார்.

8) சிமல் வைஜிடிக் - யுகோஸ்லாவியா நாட்டின் பிரதமர் - 1977ம் ஆண்டு விமான விபத்தில் பலியானார்.

9) அமேட் ஓல்ட் வசீவ் - மொரிரேனியா நாட்டின் பிரதமர் - 1979ம் ஆண்டு விமான விபத்தில் பலியானார்.

10) பிரான்ஸ்சிஸ்கோ சா கர்னிரோ- போர்த்துக்கல் நாட்டின் பிரதமர் - 1980ம் ஆண்டு விமான விபத்தில் பலியானார்.

11) ஜய்மி ரொல்டோஸ் எகுலெரா- ஈக்குவடோர் நாட்டின் ஜனாதிபதி - 1981ம் ஆண்டு விமான விபத்தில் பலியானார்.

12) சமோரா மாகெல்- மொசாம்பிக் நாட்டின் ஜனாதிபதி -1986ம் ஆண்டு விமான விபத்தில் பலியானார்.

13) முஹமட் சியா-உல்-ஹக்-பாகிஸ்தான் நாட்டின் ஜனாதிபதி - 1988ம் ஆண்டு விமான விபத்தில் பலியானார்.



14) சைபிரியென் ரர்யமிரா- புருண்டி நாட்டின் ஜனாதிபதி - 1994ம் ஆண்டு விமான விபத்தில் பலியானார்.

15) ஜுவெனல் ஹவிரிமனா- ருவாண்டா நாட்டின் ஜனாதிபதி - 1994ம் ஆண்டு விமான விபத்தில் கொலைசெய்யப்பட்டார்.

16) வொரிஸ் ரஜ்கோவ்ஸ்கி- மசிடோனியா நாட்டின் ஜனாதிபதி - 2004ம் ஆண்டு விமான விபத்தில் பலியானார்.

17) ஜோன் கரங்- சூடான் நாட்டின் உப ஜனாதிபதி - 2005ம் ஆண்டு விமான விபத்தில் பலியானார்.

18) லெச் கக்ஸின்ஸ்கி - போலந்து நாட்டின் ஜனாதிபதி - 2010ம் ஆண்டு விமான விபத்தில் பலியானார்.




குறிப்புக்கள் -

முஹம்மட் பின் லேடன் [ எங்கேயோ கேள்விப்பட்ட மாதிரி இருக்கின்றதா? ஆம்... 9/11 தாக்குதல் சூத்திரதாரியான ஒசாமா பின் லேடனின் தந்தையார் ] இறந்ததும் விமானவிபத்தில் தானாம். {1967ல் சவூதி அரேபியாவில்}

கென்சி குரன்ஜே - தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் தலைசிறந்த தலைவராக விளங்கியவர், கிரிக்கெட் பந்தய குற்றச்சாட்டுக்களின் காரணமாக ஆயுட்கால தடைக்குள்ளாகியவர். இவர் இறந்ததும் விமானவிபத்தில் தான். {2002ல் தென்னாபிரிக்காவில்}


******^^^^^^^**********^^^^^^^^**********^^^^



பதிவுலக நண்பர்கள், வாசகர்கள் அனைவருக்கும் என் இனிய விகிர்த்தி சித்திரைப்புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

மேலும், மலரப்போகும் விகிர்த்தி புத்தாண்டானது தமிழர் வாழ்வில் செளபாக்கியத்தையும், மகிழ்ச்சியையும் தருவதாக அமைய வேண்டும் என வாழ்த்துகின்றேன்.

விகிர்த்தி ~ கீர்த்தி பெற்றுதருவாயாக!!! ..............

***

Saturday, April 10, 2010

சிந்தனைக்காக .....




சிந்தனைக்காக ஒரு வரலாற்றுச் சம்பவம்....




( நன்றி - வீரகேசரி வாரவெளியீடு 09.08.2009)


***

Wednesday, April 7, 2010

கிரிக்கெட்டில் தமது அறிமுக போட்டிகளிலேயே அசத்தியவர்கள்

 ரிப் போஸ்ரெர், இங்கிலாந்து அணியினைச் சேர்ந்த இவர் 1903-04ம் ஆண்டு பருவகாலத்தில் அவுஸ்ரேலிய அணிக்கெதிராக அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே 287 ஓட்டங்களைப் பெற்றார். அறிமுக டெஸ்ட் போட்டியில் அதிகூடிய ஓட்டங்களைப் பெற்ற ஒரே வீரர் என்ற சாதனைக்குரியவரும் இவரே ஆவார். இங்கிலாந்து அணிக்காக உதைபந்தாட்டம் மற்றும் கிரிக்கெட் குழாமின் தலைவராகவும் கடமையாற்றிய ஒரே வீரரும் இவரே ஆவார்.




 லோரென்ஸ் ரோவ், மே.தீவுகள் அணியினைச் சேர்ந்த இவர் 1971-72ம் ஆண்டு பருவகாலத்தில் நியூசிலாந்து அணிக்கெதிராக அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே 214 மற்றும் 100* ஓட்டங்களைப் பெற்றார். அறிமுக டெஸ்ட் போட்டியில் இரட்டைச்சதம் மற்றும் சதம் பெற்ற ஒரே வீரர் என்ற சாதனைக்குரியவரும் இவரே ஆவார்.

 யாசீர் ஹமீட், பாகிஸ்தான் அணியினைச் சேர்ந்த இவர் 2003ம் ஆண்டு பருவகாலத்தில் பங்களாதேஷ் அணிக்கெதிராக அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே 170 மற்றும் 108 ஓட்டங்களைப் பெற்றார். அறிமுக டெஸ்ட் போட்டியில் 1வது&2வது இன்னிங்ஸ்களில் சதம் பெற்ற 2வது வீரர் என்ற சாதனைக்குரியவரும் இவரே ஆவார்.

 புருஸ் டெய்லர், நியூசிலாந்து அணியினைச் சேர்ந்த இவர் 1965ம் ஆண்டு பருவகாலத்தில் இந்திய அணிக்கெதிராக அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே 105 ஓட்டங்களையும் மற்றும் 86 ஓட்டங்களுக்கு 5விக்கட்களையும் பெற்றார். அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் மற்றும் 5விக்கட்களை வீழ்த்திய ஒரே வீரர் என்ற சாதனைக்குரியவரும் இவரே ஆவார்.

 முஹமட் அசாருதின், இந்திய அணியினைச் சேர்ந்த இவர் 1984ம் ஆண்டு பருவகாலத்தில் இங்கிலாந்து அணிக்கெதிராக அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே 110 ஓட்டங்களைப் பெற்றார். இது மாத்திரமன்றி தொடர்ந்து 2டெஸ்ட் போட்டிகளில் சதங்களை பெற்றார். தனது முதல் 3போட்டிகளிலும் சதம் பெற்ற ஒரே வீரர் என்ற சாதனைக்குரியவரும் இவரே ஆவார்.




 நரேந்திர ஹிர்வாமானி , இந்திய அணியினைச் சேர்ந்த இவர் 1998ம் ஆண்டு பருவகாலத்தில் மே.தீவுகள் அணிக்கெதிராக அறிமுக டெஸ்ட் போட்டியில் 136 ஓட்டங்களுக்கு 16 விக்கட்களை வீழ்த்தினார்.இவர் இந்த சாதனையினை 1 ஓட்டத்தினாலேயே முறியடித்தமை குறிப்பிடத்தக்கதாகும். இதற்கு முன்னர் இந்த சாதனையினை ஆஸி அணியினைச் சேர்ந்த பொவ் மஸி 137 ஓட்டங்களுக்கு 16 விக்கட்களை வீழ்த்தி சாதனை படைத்தமை நினைவில் கொள்ளத்தக்கதாகும்.

 ஜெப் கிறினிட்ச்,[கோடன் கிறினிட்ச்சுக்கும் இவருக்கும் எந்த சம்பந்தமுமில்லை] பாபடோஸ் அணியினைச் சேர்ந்த இவர் 1966-67ம் ஆண்டு பருவகாலத்தில் ஜமேக்கா அணிக்கெதிராக தனது அறிமுக முதல்தர டெஸ்ட் போட்டியில் 205 ஓட்டங்களையும் அத்துடன் 124ஓட்டங்களுக்கு 7விக்கட்களையும் பெற்றார். மே.தீவுகள் அணிக்காக டெஸ்ட் போட்டி விளையாடிய இறுதி வெள்ளை இன வீரர் இவரே ஆவார்.

 அல்பேர்ட் மோஸ்[நியூசிலாந்து], கென்டவெரி அணிக்காக அறிமுக முதல்தர டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ்சில் 28 ஓட்டங்களுக்கு 10 விக்கட்களை வீழ்த்தினார். அறிமுக முதல்தர டெஸ்ட் போட்டியில் 10விக்கட்களை வீழ்த்திய ஒரே வீரர் என்ற சாதனைக்குரியவரும் இவரே ஆவார்.

***

Monday, April 5, 2010

நீரின்றி இவ்வுலகில்லை......




ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 22ம் திகதி உலக நீர் தினமாக அனுஷ்டிக்கப்படுகின்றது. இந்த உலகில் மக்கள் உயிர் வாழ்வதற்கு தூய நீர் முக்கியமானதாகும். “உணவின்றி ஒரு மனிதன் சில வாரங்கள் உயிர் வாழமுடியும், ஆனால் நீரின்றி ஒரு மனிதன் சில நாட்களே உயிர் வாழமுடியும்.”

உலகில் அதிகளவான மக்கள் தொகையினர் தமது நீர் தேவைகளுக்காக ஆற்று மூலங்களிலேயே தங்கியுள்ளனர். பல்வேறு மாசுபடுத்தல்கள் காரணமாக உலகிலுள்ள பிரதானமான ஆற்று மூலங்கள் பாரியளவான மாறுதல்களினை வெளிக்காட்டி நிற்கின்றன.


பூமியின் 70%மான பகுதியானது நீரினால் சூழப்பட்டுள்ளது.

நீர் மாசுபடுத்தல்கள் காரணமாக, அபிவிருத்தி அடைந்து வருகின்ற உலகத்திலுள்ள கிராமப்புற மக்களில் 60%-70% ஆன தூய நீரினைப் பெறுவதற்கான மூலங்களிலிருந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு உயிரினத்துக்கும் நீர் முக்கியத்துவம் என்பது போல, ஒவ்வொரு உயிரினத்தினுடைய உருவாக்கத்துக்கும் ஏதோ ஒரு வகையில் நீர் முக்கியத்துவமானதாகும். உதாரணமாக கோழியானது 75% நீரினையும், அன்னாசிப்பழம் 80% நீரினையும் கொண்டுள்ளது.

உலகில் 3% ஆன நீரே தூய நீராக காணப்படுகின்றது. அத்துடன் 97% ஆன நீரானது சிகரங்களிலேயே உள்ளது.

உலகிலுள்ள தூய நீரில் 1% க்கும் குறைவான நீரே மனிதனால் நேரடியாகப் பாவனைக்கு பயன்படுத்தும்படியாக உள்ளது. [ இது உலகிலுள்ள நீரில் 0.007% பங்காகும்]

சராசரியாக ஒவ்வொரு மனிதனும் தன் வாழ் நாள் பூராகவும் 16,000 கலன்கள் நீரினை உள்ளெடுக்கின்றான்.



உலகிலுள்ள மக்கள் தூய குடிநீரின்றி மூலங்களின்றி பல்வகைப்பட்ட பாதிப்புக்களினை எதிர்நோக்குகின்றனர். தூய குடிநீரின்றி, உலக மக்களுக்கு ஏற்படுகின்ற பாதிப்புக்கள் தொடர்பான ஒரு கண்ணோட்டம்..............

நீருடன் தொடர்புடைய நோயின் காரணமாக, வருடாந்தம் 3.575 மில்லியன் மக்கள் இறக்கின்றனர்.

நீருடன் தொடர்புடைய நோயின் காரணமாக ஏற்படுகின்ற இறப்புக்களில் 43%ஆன இறப்புக்களுக்கு டயரியா காரணமாகின்றது.

நீருடன் தொடர்புடைய நோயின் காரணமாக ஏற்படுகின்ற இறப்புக்களில் 84%ஆன இறப்புக்களால் 0-14 வயதிற்கிடைப்பட்ட குழந்தைகள் மரணிக்கின்றனர்.

ஒவ்வொரு 15 செக்கன்களுக்கும், ஒரு குழந்தை நீருடன் தொடர்புடைய நோயின் காரணமாக மரணிக்கின்றது.

நீருடன் தொடர்புடைய நோயின் காரணமாக ஏற்படுகின்ற இறப்புக்களில் 98%ஆன இறப்புக்கள் அபிவிருத்தி அடைந்து வருகின்ற நாடுகளிலேயே ஏற்படுகின்றது.

உலகிலுள்ள வைத்தியசாலைகளிலுள்ள கட்டில்களில் அரைவாசிக்கும் அதிகமானவை நீருடன் தொடர்புடைய நோயின் காரணமாக பாதிக்கப்பட்ட நோயாளர்களாலேயே நிரப்பப்படுகின்றதாம்.

உலகில் 884 மில்லியன் மக்கள் தூய நீரினைப் பெறுவதற்கான மூலங்களின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். இது மக்களில் எட்டில் ஒரு பங்காகும்.

உலகவெப்பமயமாதல் போன்றவை காரணமாக இன்று வரட்சி நிலையானது உலகினை மேலும்மேலும் வாட்டிவருகின்றது. இதன்காரணமாக உலகமக்கள் மேலும் பல்வேறுபட்ட பாதிப்புக்களினை எதிர்கொள்கின்றனர். இதன்காரணமாக நீர்மூலங்கள் வற்றிச்செல்கின்ற நிலையினை நாம் தற்சமயம் உணரக்கூடியதாக உள்ளது.




ஒரு அமெரிக்கன் 5 நிமிடங்கள் குளிக்கப் பயன்படுத்துகின்ற நீரினளவானது, அபிவிருத்தி அடைந்து வருகின்ற நாடுகளில் வசிக்கின்ற ஒரு சேரிப்புற சாதாரண மனிதன் அன்றைய நாள் பூராகவும் பயன்படுத்துகின்ற நீரினளவுக்கு சமனாகுமாம்.”

நீயின்றி நான் வாழலாம்
நானின்றி நீயும் வாழலாம்
ஆனால் நீரின்றி நாம் யாரும் வாழமுடியாது

***
Blog Widget by LinkWithin