Wednesday, September 29, 2010

ஹிட்லரை வியக்கவைத்த இந்திய ஹொக்கி அணி....

ஒரு காலத்தில் ஹொக்கி விளையாட்டு என்றால் இந்திய அணிதான் என்ற நிலையிருந்துவந்தது. ஆனால் இந்த நிலைமை தற்சமயம் மாற்றமடைந்துவிட்டது என்றால் மிகையில்லை எனலாம்.

ஒலிம்பிக்கில் இந்திய ஹொக்கி அணி இதுவரை 8 தங்கப்பதக்கங்களையும், 2 வெள்ளிப்பதக்கங்களையும் பெற்று சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

1928ம் ஆண்டு நெதர்லாந்து ஆம்ஸ்டர்டாம் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹொக்கி அணி முதன்முதலில் தங்கப்பதக்கம் வென்றது.


"மந்திரக்கோல் மன்னர்" என அழைக்கப்பட்ட தயான் சந்

1936ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் ஜேர்மனியின் பேர்லின் நகரில் நடைபெற்றன. இதில் 1928 மற்றும் 1932ம் ஆண்டு ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற தயான் சந் தலைமையிலான இந்திய ஹொக்கி அணி, இறுதிப்போட்டியில் ஜேர்மனியினை 8-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. தமது தேச ஹொக்கி அணி தோல்வியடைந்த காரணத்தினால் அப்போதைய ஜேர்மனியின் அரசதலைவராகவிருந்த ஹிட்லர், இந்திய ஹொக்கி அணி தலைவரின் மட்டை மந்திரக்கோலா என சந்தேகித்து அதனை பரிசோதிக்கும்படி தனது காவலர்களுக்கு உத்தரவிட்டார்.

தயா சந்தின் மட்டை ஹொக்கி மட்டைதான் என உறுதிசெய்யப்பட்டபின்னர் அதனை தான் வாங்குவதாக ஹிட்லர் கூறினார். அந்த ஹொக்கி மட்டையில் தயா சந்தின் ஆட்டோகிராப்பினையும் ஹிட்லர் பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஒலிம்பிக் ஹொக்கியில் 6 முறை தொடர்ச்சியாக தங்கப்பதக்கம் வென்ற இந்திய அணி 1960ம் ஆண்டு இத்தாலியின் ரோம் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் ஹொக்கி இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் தோல்வியடைந்து வெள்ளிப்பதக்கம் வென்றது.


இந்தியா 1980ம் ஆண்டு ரஷ்சியாவின் மொஸ்கோ நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் ஹொக்கியில் தமது இறுதி தங்கப்பதக்கத்தினை வெற்றி கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும். அதன் பின்னர் இந்தியாவுக்கு ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வது கனவாகவே இருக்கின்றது.

=======================================

உங்களுக்குத் தெரியுமா?....

19வது பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள் பல்வேறு சர்சைகளுக்குப் பின்னர் இந்தியாவின், புதுடில்லி நகரில் ஆரம்பமாகவுள்ளன. பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் பிரிட்டனின் காலனித்துவ ஆட்சியின் கீழிருந்த நாடுகளே கலந்துகொண்டாலும் வரலாற்றில் முதன்முறையாக பிரிட்டனின் ஆளுகைக்குட்படாத நாடொன்று இந்தமுறை போட்டிகளில் பங்கேற்கின்றது. அந்த நாடு ஆபிரிக்க கண்டத்தினை சேர்ந்த பெல்ஜியத்தின் ஆளுகைக்குட்பட்ட றுவாண்டா நாடாகும்.

றுவாண்டா நாடானது 2009ம் ஆண்டு நவம்பர் மாதம் பொதுநலவாய அமையத்தில் 54வது நாடாக சேர்ந்துகொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

***

Sunday, September 26, 2010

அறிவியல் துளிகள்.....

சில சுவாரஷ்சியமான அறிவியல் தகவல்களினைக் கொண்ட பத்திரிகையில் வெளிவந்த என்னுடைய ஆக்கம்…….





(நன்றிவீரகேசரி வாரவெளியீடு 19.09.2010)
***

Wednesday, September 22, 2010

பொதுநலவாய விளையாட்டு போட்டிகள் தொடர்பான பார்வை.......



2010ம் ஆண்டுக்கான பொதுநலவாய(கொமன்வெல்த்) விளையாட்டு போட்டிகள் இந்தியாவின் புதுடில்லியில் ஒக்டோபர்3ம் திகதி முதல் 14ம்திகதி வரை நடைபெறவுள்ளன. இது 19வது பொதுநலவாய விளையாட்டு போட்டிகள் ஆகும். இந்தியாவில் பொதுநலவாய விளையாட்டு போட்டிகள் நடைபெறுவது இதுவே முதல்தடவையாகும், என்பதுடன் இது ஆசியாவுக்கு 2வது முறையாகும். முதற்தடவையாக ஆசியாவில் 1998ல் கோலாலம்பூர், மலேசியாவில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

பொதுநலவாய போட்டிகள் என்பது பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சிக்குட்பட்ட நாடுகள் மாத்திரம் பங்குபற்றுகின்ற விளையாட்டு போட்டிகள் ஆகும்.

பொதுநலவாய போட்டிகளின் சிறப்பம்சமாக, பல்தேசியம் மற்றும் பல்வகை விளையாட்டு நிகழ்வுகள் என்பன திகழ்கின்றன. பொதுநலவாய விளையாட்டு போட்டிகள் ஒவ்வொரு 4 ஆண்டுகளுக்கும் ஒரு தடவை நடைபெறுகின்றன.

பொதுநலவாய விளையாட்டு போட்டிகள் ஆரம்பத்தில் பிரிட்டிஷ் அரச போட்டிகள் என முதற்தடவையாக 1930ம் ஆண்டு கனடா, ஹமில்டன், ஒன்ராரியோவில் நடைபெற்றது. அதன்பின்னர் இந்தப் போட்டிகள் பிரிட்டிஷ் அரச மற்றும் பொதுநலவாய விளையாட்டு போட்டிகள் என 1954ம் ஆண்டும், மேலும் பிரிட்டிஷ் பொதுநலவாய விளையாட்டு போட்டிகள் என 1970ம் ஆண்டும் , 1978ம் ஆண்டுக்குப்பிற்பாடு தற்போது நடைமுறையிலுள்ள பொதுநலவாய விளையாட்டு போட்டிகள் என்ற பெயரில் நடைபெற்றுவருகின்றன.



ஒலிம்பிக் போட்டிகளில் பெரிய பிரித்தானியா என ஒரே அணியாக களமிறங்குகின்ற இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, வேல்ஸ், வட அயர்லாந்து ஆகிய நாடுகள் பொதுநலவாய விளையாட்டு போட்டிகளில் தனித்தனி அணியாக பங்குபற்றுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதுவரை நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டு போட்டிகள் அனைத்திலும் பங்குபற்றிய நாடுகளாக 06 நாடுகள் விளங்குகின்றன. அவையாவன; அவுஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஸ்கொட்லாந்து, வேல்ஸ் ஆகியனவாகும்.

1930ம் ஆண்டு நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டு போட்டிகளில் பெண்கள் நீச்சல் போட்டிகளில் மாத்திரமே போட்டியிட்டனர். 1934ம் ஆண்டிலிருந்து தடகளப் போட்டிகளிலும் பெண்கள் கலந்துகொள்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஒலிம்பிக் போட்டிகள் போன்றே பொதுநலவாய விளையாட்டு போட்டிகளும் அரசியல் சர்ச்சைகளுக்குள் சிக்கியதுண்டு. நைஜீரியாவானது, நியூசிலாந்து நாடானது நிறவெறி நாடாக விளங்கிய தென்னாபிரிக்காவுடன் தொடர்புகளைப் பேணுகின்றது என்ற காரணத்தைக்காட்டி 1978ம் ஆண்டு நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டு போட்டிகளைப் பகிஷ்கரித்தது. மேலும் 1986ம் ஆண்டு நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டு போட்டிகளை ஆபிரிக்கா, ஆசியா, கரீபியன் பிராந்தியங்களைச் சேர்ந்த 59 நாடுகளில் 32 நாடுகள் போட்டிகளை பகிஷ்கரித்தன. இதற்கான காரணம் இங்கிலாந்து பிரதமராக ஆட்சிசெய்த மாக்கிரட் தட்சரின் அரசாங்கமானது தென்னாபிரிக்காவுடன் தொடர்புகளைப் பேணியது என்பதனாலாகும். மேலும் தென்னாபிரிக்காவின் நிறவெறியின் காரணமாக 1974,1982,1990ம் ஆண்டுகளிலும் நாடுகளின் பகிஷ்கரிப்புக்கள் அச்சுறுத்தலாக அமைந்தன.

இந்தமுறை மொத்தமாக 31வகையான விளையாட்டுக்கள் அரங்கேறுகின்றன. இதில் 71 நாடுகளின் 7000க்கு மேற்பட்ட வீர, வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
19வது பொதுநலவாய விளையாட்டு போட்டிக்கான தொனிப்பொருள் "வெளியே வாருங்கள்; விளையாடுங்கள்" என்பதாகும்.

20வது பொதுநலவாய விளையாட்டு போட்டிகள் 2014ம் ஆண்டு ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெறவுள்ளன.

===============================================

பொதுநலவாய விளையாட்டு போட்டிகள் இந்தியாவில் ஒழுங்காக நடைபெறுமா?...


இந்தியாவில் பொதுநலவாய விளையாட்டு போட்டிகள் நடைபெறும் என அறிவித்த நாளிலிருந்து பல்வேறு சர்ச்சைகள் இந்தியாவினை தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. போட்டி தொடர்பிலான ஊழல் சர்ச்சைகள், போட்டிக்கான அரங்கு நிர்மாணப்பணிகளின் மந்தநிலை, வீரர்களுக்கான தங்குமிட குடியிருப்புக்களின் சுகாதார சீர்கேடுகள், டெங்கு நோய் அச்சுறுத்தல் ஆகியவை இந்தியாவினை அச்சுறுத்திக்கொண்டே இருக்கின்றன. மேலும் அண்மைய பிரச்சினையாக வீரர்களுக்கான பாதுகாப்பு அச்சுறுத்தல்களை பல்வேறு நாடுகளும் காரணம் காட்டத்தொடங்கியுள்ளன. ஏனெனில் அண்மையில் டில்லியில் வெளிநாட்டவர்கள் மீதான தாக்குதல் சம்பவமொன்றில் 2 தாய்வான் நாட்டவர்கள் காயமுற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதனைவிட நேற்று இடம்பெற்ற பிறிதொரு சம்பவமாக, போட்டி நடைபெறுகின்ற இடத்தில் நிர்மாணிக்கப்பட்டுவருகின்ற மேம்பாலமானது சரிந்துவிழுந்ததில் 23தொழிலாளர்கள் காயமுற்றதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

முன்னணி வீர, வீராங்கனைகள் பலரும் போட்டிகளில் பங்கேற்பதிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளமையும் பொதுநலவாய விளையாட்டு போட்டிகளின் சுவாரஷ்சியத்தினை குறைக்கத்தொடங்கியுள்ள இந்தத் தருணத்தில் போட்டி நடைபெறுகின்ற காலகட்டத்தில் மழைபெய்யக்கூடுமென இந்திய வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளமை போட்டிகள் ஒழுங்காக நடைபெறுமா? என்கின்ற வினாவினை பலரின் மனதிலும் ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

உலகத்தில் பொருளாதார வளர்ச்சியில் முன்னணி வகிக்கின்ற இந்தியாவானது தனக்கு கிடைத்த அருமையான வாய்ப்பினை சீரற்ற நிருவாக முகாமை, திட்டமிடல் குறைபாடுகள், ஊழல் போன்ற பல்வேறு காரணங்களினால் பொதுநலவாய விளையாட்டு போட்டிகள் போன்ற பெரியளவான நிகழ்வுகளினை சமாளிக்கமுடியாதாத நாடாகவா விளங்குகின்றது?........

***

Monday, September 20, 2010

உயிரினங்களின் "பற்கள்" தொடர்பான சுவையான தகவல்கள்...

 நத்தைகள் தனது வாயில் 135 பல்வரிசைகளில் மொத்தமாக 14175 பற்களைக் கொண்டுள்ளன.

 எறும்புதின்னிகளுக்கு அதனது வாயில் பற்கள் இல்லை.

 பசுமாடுகளுக்கு மேற்தாடை பற்கள் இல்லை.



 முயல்களின் பற்களானது எப்பொழுதும் வளர்ச்சியடைந்துகொண்டே இருக்குமாம்.

 ஆமைகளுக்கு அதனது வாயில் பற்கள் இல்லை.

 யானைகள் அதனது வாயில் 4 பற்களைக் கொண்டுள்ளன. ஒவ்வொரு பல்லின் நிறையும் 9-12 பவுண்ட்களுக்கும்(4-5 கிலோகிராம்) அதிகமாம்.



 சுறா மீன்களுக்கு ஒவ்வொரு வாரமும் பற்கள் விழுந்து புதிதாக முளைக்குமாம். இவ்வாறு விழுந்து முளைக்கின்ற பற்கள் காரணமாக, சுறாக்கள் தன் வாழ்நாளில் 20000க்கும் மேற்பட்ட பற்களை கொண்டிருக்குமாம்.

 சில டொல்பின்களுக்கு 200க்கு மேற்பட்ட பற்கள் உண்டாம்.

 விளீன் திமிங்கிலங்களுக்கு(Baleen whales) பற்கள் இல்லையாம்.

 ஒட்டகச்சிவிங்கிகள் மனிதர்களைப் போலவே 32 பற்களைக் கொண்டுள்ளன.

 நிலத்தில் வாழும் பாலூட்டிகளில் அதிகமான பற்களைக் கொண்ட உயிரினம் மிக நீளமான ஆர்மடில்லோக்கள் ஆகும். இவை தன் வாயில் 100க்கும் மேற்பட்ட பற்களைக் கொண்டுள்ளன

***

Thursday, September 16, 2010

கரையே இல்லாத கடற்கரை.....!!!



அடடா...... என்னா? கரையே இல்லாத கடற்கரையா?.... ஆமாங்க.... சர்காசோ கடல்தான் இந்த சிறப்புக்குக்குரிய கடலாகும். சர்காசோ கடலானது வட அத்திலாண்டிக் சமுத்திரத்தின் மத்தியில் அமைந்துள்ள பிராந்தியமாகும். இந்தக் கடலானது சமுத்திர நீரோட்டங்களினால் சூழப்பட்டு, கரையினைக் கொண்டிராத ஒரே கடலாக விளங்குகின்றது. இதன் எல்லைகளாக மேற்கே வளைகுடா சூடான சமுத்திர நீரோட்டமும் , வடக்கே வட அத்திலாண்டிக் சமுத்திர நீரோட்டமும், கனேரி சமுத்திர நீரோட்டமும், தெற்கே வட அத்திலாண்டிக் பூமத்தியரேகை சமுத்திர நீரோட்டமும் விளங்குகின்றன.


சர்காசோ கடலானது, அத்திலாண்டிக்கில் ஒரு பாகமாக 20o - 35o வட அகலாங்கிலும், 30o - 70o மேற்கு நெட்டாங்குக்கும் இடையே விசாலமாக பரந்து காணப்படுகின்றது. இந்தக் கடலின் மேற்கு எல்லைக்கு அண்மையில் பெர்முடா முக்கோணப் பிராந்தியம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்..

சர்காசோ கடலானது 700 கடல்மைல்கள்(1100கி.மீ) அகலமானதுடன், 2000 கடல்மைல்கள்(3200கி.மீ) நீளமானதுமாகும்.

15ம் நூற்றாண்டளவில் போர்த்துக்கேய கடற்படையினரால் முதன்முதலில் இந்த பிராந்தியம் கண்டறியப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.



பாரியளவில் சர்காசோம் கடல் தாவரங்கள் மிதந்தவண்ணம் காணப்படுகின்றமை இந்தக் கடலின் சிறப்பம்சமாகும்.

தென் அமெரிக்கா, ஐரோப்பாவிலிருந்து பல ஆயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து இனவிருத்திக்காகவும், முட்டை இடுவதற்காகவும் சர்காசோ கடலினை நோக்கி ஈல்கள் நீந்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். பின்னர் இந்த ஈல்கள் தமது நீண்ட தூர கடற்பயணத்தினை தமது பழைய வாழிடங்களான தென் அமெரிக்கா, ஐரோப்பாவினை நோக்கி சென்றுவிடுகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.


பெர்முடா முக்கோணப் பிராந்தியத்தினைப்போல சர்காசோ கடலிலும் பல படகுகள் காணாமல்போனதாக வரலாற்றுச் சம்பவங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.


***

Monday, September 13, 2010

உலகில் மிகப்பெரிய மணி......




உலகில் மிகப்பெரிய மணியாக புகழ்பெற்ற "சார் கொலோகொல்" [Tsar-Kolokol] விளங்குகின்றது. ஆனால் இந்த மணி உடைந்த நிலையிலேயே காணப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

"சார் கொலோகொல்" மணியானது, ரஷ்சியாவின் தலைநகராகிய மொஸ்கோவிலுள்ள ரஷ்சிய அதிபரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமாகிய கிரம்ளனில் அமைந்துள்ளது. இந்த மணியானது 1733-35ம் ஆண்டளவில் வடிவமைக்கப்பட்டதாகும். இதன்போது இந்த மணியானது 3தடவைகள் புதுப்பிக்கப்பட்டு, ஒவ்வொரு தடவையின்போதும் அதிகளவில் உலோகங்கள் சேர்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதன் நிறையானது 400,000பவுண்ட்(180தொன்கள்) ஆகும். இதன் உயரம் 6.14மீற்றர்கள் அத்துடன் இதன் விட்டம் 6.6 மீற்றர்கள் ஆகும். இந்த மணியினை 200இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒன்றிணைந்தே வடிவமைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


1737ம் ஆண்டு ஏற்பட்ட மிகப்பெரிய தீவிபத்தொன்றின் காரணமாகவே "சார் கொலோகொல்" மணியில் ஒரு துண்டு உடைந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இந்த உடைந்த துண்டின் நிறை 11.5 தொன்களாகும். இதன் காரணத்தினால் "சார் கொலோகொல்" ம்ணியானது ஒலிப்பதில்லை.


உலகில் ஒலி எழுப்பும் மிகப்பெரிய மணி......



உலகில் ஒலி எழுப்பும் மிகப்பெரிய மணியானது மியன்மாரில் காணப்படுகின்றது. "மின்கன்"[ Mingun] மணியானது மத்திய மியன்மாரில், மண்டலி நகரின் வடக்கே அமைந்துள்ளது.

"மின்கன்" மணியானது 1808ம் ஆண்டு ஏப்ரல் 28ம் திகதி பொடவ்பயா மன்னனால் நிர்மாணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த மணியானது 13அடி[3.96மீற்றர்] உயரமானதுடன், இதன் நிறை 90.55 மெட்றிக் தொன்களாகும்.


=================================================


பிரபல பின்னணிப் பாடகி சொர்ணலதா காலமானார்....




தமிழ் திரைப்படத்துறையின் பிரபல பின்னணிப் பாடகி "சொர்ணலதா" தனது 37வது வயதில் நேற்று காலமானார். தனது வசீகரமான குரலால் ரசிகர்களின் அபிமானத்தினை பெற்றிருந்த பாடகி சொர்ணலதா இந்திய அரசின், சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதினை "கருத்தம்மா" படத்திற்காக பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.


சொர்ணலதாவின் இழப்பினால் துயருறும் அன்னாரின் குடும்பத்தாருக்கும், ரசிகர்களுக்கும் ஆறுதல்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.


போறாளே பொன்னுத்தாயி..... கருத்தம்மா பாடல்வரிகள் இன்றும் என்மனதில் பசுமையானதாக நிலைத்துநிற்கின்றது...

***

Saturday, September 11, 2010

9/11 தாக்குதல் தொடர்பிலான Numerology....



உலக வல்லரசாம் அமெரிக்க தேசத்தினை மட்டுமின்றி முழு உலகினையும் நிலைகுலையச் செய்த உலக வர்த்தக மைய இரட்டைக் கோபுரங்கள் மீதான தாக்குதல் நடைபெற்று தற்சமயம் 9 ஆண்டுகள் ஆகின்றது.

9/11 தாக்குதல் தொடர்பில் ........

1) நியூயோர்க் நகரம் [New York City] ~ 11 எழுத்துக்களைக் கொண்டிருக்கின்றது.

2) ஆப்கானிஸ்தான் நாடு [Afghanistan] ~ 11 எழுத்துக்களைக் கொண்டிருக்கின்றது.

3) ஜோர்ஜ் W புஷ் [George W Bush] என்கின்ற பெயர் ~ 11 எழுத்துக்களைக் கொண்டிருக்கின்றது.

4) இரட்டைக் கோபுரங்கள் என்பது ~ இலக்கம் 11 என்பதனை உருவாக்குகின்றது.



9/11 தாக்குதல் தொடர்பிலான மேலும் சில சுவாரஷ்சியமான தகவல்கள் ...........

1) நியூயோர்க், ஐக்கிய அமெரிக்காவின் 11வது மாநிலமாகும்.

2) இரட்டைக் கோபுரங்களில் மோதிய முதலாவது விமானத்தின் பறப்பு [flight] இலக்கம் 11

3) 11ம் பறப்பிலக்கமுடைய விமானமானது சுமந்துவந்த மொத்த பயணிகளின் எண்ணிக்கை 92. ~ 9 + 2 = 11

4) இரட்டைக் கோபுரங்களில் மோதிய 77ம் பறப்பிலக்கமுடைய விமானமானது சுமந்துவந்த மொத்த பயணிகளின் எண்ணிக்கை 65. ~ 6 + 5 = 11

5) இரட்டைக் கோபுரங்களில் மீதான தாக்குதல் நடைபெற்றது செப்டம்பர் 11 அல்லது 9/11 எனலாம். ~ 9 + 1 + 1 = 11

6) இந்த திகதியானது அமெரிக்காவின் அவசர சேவைக்கான தொலைபேசி இலக்கமாகும் 911. ~ 9 + 1 + 1 = 11

இவை தவிர 9/11 தாக்குதல் தொடர்பிலான மேலும் சில சுவாரஷ்சியமான தகவல்கள்..........

1) விமானங்களில் பயணித்து மொத்தமாக மரணித்தோர் 254. ~ 2 + 5 + 4 = 11

2) தாக்குதல் நடைபெற்ற செப்டம்பர் 11 என்பது கலண்டர் ஆண்டின் படி 254ம் நாளாகும். ~ 2 + 5 + 4 = 11

***

Thursday, September 9, 2010

உடற் பருமனைக் குறைக்க உதவும் "தண்ணீர்"




ஆராய்ச்சியாளர்களின் ஆய்வின் பிரகாரம், உடற் பருமனாவது உலகில் மிகப் பெரிய சுகாதார அச்சுறுத்தலாக நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இதய நோய்கள் மற்றும் ஏனைய சுகாதாரப் பிரச்சினைகளுடன் தொடர்புபடுவதாக வகைப்படுத்தியுள்ளனர்.

அந்தவகையில் உடற்பருமனை குறைப்பதற்கான மிக இலகுவாக அருமருந்தாக "தண்ணீர்" விளங்குகின்றது என அமெரிக்க விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

தமது ஆய்வின் பிரகாரம், சாப்பாட்டுக்கு முன்னர் 2 குவளை நீரினை குடிப்பதன் மூலம் தமது உடற்பருமனைக் குறைக்கமுடியும் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.


அவர்கள் தமது ஆய்வுக்காக, 55-75 வயதிற்கிடைப்பட்ட 48 பேரினை இரண்டு குழுக்களாக வகைப்படுத்தி குறைந்த கலோரிகளினை உள்ளடக்கிய உணவுகளினையே சாப்பிடச் செய்து; ஒரு குழுவினரை சாப்பாட்டு வேளைக்கு முன்னர் 2 குவளை நீரினை அருந்தச் செய்தும், மறு குழுவினரை அவ்வாறு நீரினை அருந்தச் செய்யாமலும் தமது ஆய்வினை மேற்கொண்டனர். 12 வாரங்களின் பின் மீண்டும் மேற்கொண்ட ஆய்வின் முடிவில், சாப்பாட்டுக்கு முன் 2 குவளை நீரினை அருந்தியவர்கள் 15.5 பவுண்ட்கள்(7கிலோ) நிறை குறைவாக இருந்தனர். அதேவேளை, சாப்பாட்டுக்கு முன் 2 குவளை நீரினை அருந்தாதவர்கள் 11பவுண்ட்கள்(5கிலோ) மாத்திரமே நிறை குறைவாக இருந்தனர்.


சாப்பாட்டு வேளைக்கு முன்னர் குளிர்பானங்களை அருந்துபவர்கள் உடற்பருமனைக் குறைக்கமுடியும் என்று நினைத்தால் அது தப்பு. ஏனெனில் குளிர்பானங்களில் கலோரியினை அதிகப்படுத்தக்கூடிய சக்கரை, கொழுப்பு போன்றவை குளிர்பானங்களில் உள்ளடங்கியுள்ளதனலாகும். ஆனால் நீரில் இவைகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மூன்று வேளை சாப்பாட்டுக்கு முன்னர் நீரினை அருந்தியவர்கள் 5 பவுண்ட்கள்(2.25கிலோ) நிறை குறைவாக இருந்தனர், இவர்கள் தாம் உள்ளெடுக்கும் நீரினை அதிகரிக்காதவர்கள் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சாப்பாட்டுக்கு முன்னர் எவ்வளவு நீரினை உள்ளெடுக்கின்றீர்களோ அதற்கேற்றளவில் உங்கள் உடற்பருமனைக் குறைக்கமுடியுமென்கின்றார்கள் ஆய்வாளர்கள்.

அப்படியே செலவில்லாத இந்த மருத்துவ முறையினை பின்பற்ற தயாராகிவிட்டீர்கள்தானே? .......

உடற்பருமன் குறைப்பு தொடர்பான எனது முன்னைய பதிவு; உடற் பருமனிலிருந்து போராட உதவும் "செத்தல் மிளகாய்"

***

08.09.2010 ~ என் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த நண்பர்களுக்கு நன்றிகள் ...

****

Wednesday, September 8, 2010

"Happy Birthday to You" பிறந்தநாள் பாடல் தோன்றிய வரலாறு....!!!

உலகம் முழுவதும் பலரால் பாடப்படும் பாடல் எது என்று தெரியுமா?... "Happy Birthday to You" என்ற பிறந்தநாள் பாடல்தான். இந்தப் பாடலினை 1893ம் ஆண்டு அமெரிக்க ஆசிரியைகள் இருவர் தங்களது மாணவிகளுக்காக இயற்றினார்கள்.

இந்தப் பாடலினை இயற்றியது சகோதரிகளான மில்ட்ரெட் ஜே.ஹில்[Mildred J. Hill] மற்றும் பட்ரி ஸ்மித் ஹில்[Patty Smith Hill]ஆகியோராவர். இவர்கள் அமெரிக்காவின் கென்டெக்கி மாநிலத்தில் லூயிஸ்விள்ளே நகரில் பிறந்தவர்களாவர்.

"Happy Birthday to You" என்ற பிறந்தநாள் பாடலுக்கான இராகமானது மில்ட்ரெட் ஜே.ஹில்லினால் இயற்றப்பட்டதுடன், பல்லவியானது பட்ரி ஸ்மித் ஹில்லினால் எழுதப்பட்டதாகும்.

"Happy Birthday to You" என்ற பிறந்தநாள் பாடல் 1893ம் ஆண்டு முதன்முதலில் வெளியிடப்பட்டிருந்தாலும், இந்தப் பாடலுக்கு 1935ம் ஆண்டுதான் காப்புரிமை பெறப்பட்டு, 1963ம் ஆண்டு இந்த காப்புரிமை புதுப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

1988ம் ஆண்டு Birch Tree Group,Ltd என்கின்ற நிறுவனமானது இந்தப் பாடலின் உரிமையினை Warner Communications என்கின்ற நிறுவனத்துக்கு 25மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு[ஏனைய எல்லா சொத்துக்களும் உள்ளடங்களாக]விற்பனை செய்தது.

==========================================

பிறந்தநாள் கேக்....!!!






பிறந்தநாளைக் "கேக்" வெட்டிக் கொண்டாடும் முறை பல நூற்றாண்டுகளுக்கு முன் ஜேர்மனியிலேயே முதன்முதலில் அறிமுகமாகியது.


***

Saturday, September 4, 2010

தமது அறிமுக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இரட்டைச் சதம் அடித்தவர்கள்.....

தமது அறிமுக டெஸ்ட் போட்டியில் இரட்டைச் சதம் அடித்தவர்கள் என்ற பெருமையினை இதுவரை 05 வீரர்களே பெற்றுள்ளார்கள்.

ரிப் போஸ்ரெர் (இங்கிலாந்து எதிர் ஆஸி), 287, சிட்னி, 1903-04

லோரென்ஸ் ரோவ் (மே.தீவுகள் எதிர் நியூசிலாந்து), 214, கிங்ஸ்டன், 1971-72

பிரெண்டன் குருப்பு (இலங்கை எதிர் நியூசிலாந்து), 201, கொழும்பு, 1986-87

மத்திவ் சின்கிளெயர் (நியூசிலாந்து எதிர் மே.தீவுகள்), 214, வெலிங்டன், 1999-00

ஜக் ருடொல்ப் (தென்னாபிரிக்கா எதிர் பங்களாதேஷ்), 222*,சிட்டகொங், 2002-03



டெஸ்ட் கிரிக்கெட்டில் 4வது இன்னிங்ஸ்சில் இரட்டைச் சதம் அடித்தவர்கள்.....

டெஸ்ட் போட்டிகளில் 4வது இன்னிங்ஸ்சில் சதம் பெறுவது என்பது மிகவும் சவாலான விடயமாகும். டெஸ்ட் கிரிக்கெட்டில் 4வது இன்னிங்ஸ்சில் இரட்டைச் சதம் அடித்தவர்களாக இதுவரையும் 05 வீரர்களே சாதனை படைத்துள்ளனர்.

GA ஹெட்லி (மே.தீவுகள் எதிர் இங்கிலாந்து), 223, கிங்ஸ்டன், 1930

WJ எட்ரிச் (இங்கிலாந்து எதிர் தென்னாபிரிக்கா), 219, டேர்பன், 1939

சுனில் கவாஸ்கர் (இந்தியா எதிர் இங்கிலாந்து), 221, த ஓவல், 1979/80

கோர்டன் கிரினிட்ஜ் (மே.தீவுகள் எதிர் இங்கிலாந்து), 214*, லோட்ஸ், 1984/85

நாதன் அஸ்லே ( நியூசிலாந்து எதிர் இங்கிலாந்து), 222, கிறிச்சேர்ச், 2002



டெஸ்ட் கிரிக்கெட்டில் 4வது இன்னிங்ஸ்சில் இரட்டைச் சதம் அடித்தவர்களாக 05 வீரர்களே திகழ்ந்தாலும், 1984/85ல் லோட்ஸ்சில் நடைபெற்ற இங்கிலாந்துடனான டெஸ்ட் போட்டியில் மே.தீவுகளின் கோர்டன் கிரினிட்ஜ் 214 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்ற டெஸ்ட் போட்டியே வெற்றியில் நிறைவடைந்தமை நினைவில்கொள்ளத்தக்க விடயமாகும்.

***

Thursday, September 2, 2010

ஒலிம்பிக் சாம்பியனுக்கு ஹிட்லர் வழங்கிய ஓக் மர அன்பளிப்பு...!!!



1936ம் ஆண்டு 11வது ஒலிம்பிக் போட்டிகள் ஜேர்மனியின் பேர்லினில் நடைபெற்ற காலகட்டத்தில் ஜேர்மனியின் அதிபராக அடோல்ப் ஹிட்லர் ஆட்சி செய்தார். அந்த ஒலிம்பிக்கில் அதிதியாக அழைக்கப்பட்டவர் ஹிட்லர். அதிதியான ஹிட்லர், தங்கப்பதக்கம் வென்றவர்களுக்கு ஓக் மரக்கன்றுகளினை அன்பளிப்பாக வழங்கினார். அப்படி ஓக் மரக்கன்றினை பெற்றவர்களில் இங்கிலாந்தினைச் சேர்ந்த "ஹரோல்ட் விற்லொக்" அவர்களும் உள்ளடங்குகின்றார். ஹரோல்ட் விற்லொக், பேர்லின் ஒலிம்பிக்கில் 50 கிலோமீற்றர் நடைப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவராவார். விற்லொக், தனக்கு அன்பளிப்பாகக் கிடைத்த ஓக் மரக்கன்றினை வடக்கு லண்டனில் தான் கல்விகற்ற பழைய பாடசாலையில் நட்டார்.


ஹரோல்ட் விற்லொக்


இதன் காரணத்தினால் அந்த ஓக் மரத்துக்கு "ஹிட்லர் ஓக் மரம்"[“Hitler Oak”] என்ற செல்லப் பெயர் வழங்கப்பட்டு வந்தது. இது 70 ஆண்டுகளாக 50அடி நிலப்பரப்பில் வியாபித்திருந்தது. 2007ம் ஆண்டு இந்த மரத்தினை பங்கஸ் நோய் தாக்கியது, இதன் காரணமாக அங்கு கல்விபயில்கின்ற மாணவர்களுக்கு தீங்கு ஏற்படலாம் என்று கருதி இந்த ஓக் மரம் அங்கிருந்து வெட்டி அகற்றப்பட்டது. இந்த ஓக் மரமிருந்த இடத்தில் ஹரோல்ட் விற்லொக்கின் பேரன், ரோஸ் தனது வீட்டில் வளர்த்துவந்த ஒலிம்பிக் ஓக் மரத்திலிருந்து உருவாகிய மரக்கன்றுகளிலிருந்து ஒன்றை வழங்கினார். இப்பொழுது இந்த புதிய ஓக் மரத்தின் செல்லப் பெயர் "ஹிட்லர் ஓக் மரத்தின் மகன்" [“Son of Hitler Oak”] என்பதாக மாற்றமடைந்துவிட்டதாம்.

***

Wednesday, September 1, 2010

ஆண் மீன், பெண் மீனாக மாற்றமடையும் இயற்கையின் அதிசயம்.......!!!

☼ வர்ரமுண்டி[Barramundy] என்கின்ற மீனினமானது ஆண் மீனினமாக வளருமாம், ஆனால் இந்தவகையான மீனினங்கள் 2 ஆண்டுகளின் பின்னர் பெண் மீனினமாக மாற்றமடைந்துவிடும் இயல்பினை கொண்டவையாகுமாம்.



மின்சார மீன்கள்.......!!!

☼ ஸ்கேட்ஸ், ரேஸ் போன்ற வகை மீன்கள் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய மீன்களாக உள்ளன. இந்த மீன்களின் தலைப்பாகத்தில் கண்களுக்குப் பின்னால் சிறிய உறுப்புக்கள் உள்ளன. இவை மின்சாரக் கதிர்களை உற்பத்தி செய்கின்றன. இந்த மின்சாரக் கதிர்கள் மீன்களின் இரையை சென்றடையும்போது அதிர்ச்சியடைந்ததுபோல ஆகிவிடுகின்றன. அப்பொழுது இவ்வகை மீன்கள் அதிர்ச்சி வாங்கிய இரையை உணவாக உண்கின்றன.

வேகமாக நீந்தும் மீனினம்
☼ செய்ல்பிஷ்[sailfish] என்கின்ற மீன் இனமே மிக வேகமாக நீந்துகின்ற மீன் வகையாகும். இதன் வேகம் மணிக்கு 109கிலோமீற்றர்(68மைல்) ஆகும்.



மெதுவாக நீந்தும் மீனினம்

☼ கடற் குதிரை[Sea Horse] மீன் இனமே மிக மெதுவாக நீந்துகின்ற மீன் வகையாகும். இதன் வேகம் மணிக்கு 0.016கிலோமீற்றர்(0.01மைல்) ஆகும்.




***
Blog Widget by LinkWithin