Thursday, March 3, 2011

உலகில் நீண்டகாலம் பதவிவகித்த ஆட்சியாளர்கள்....

மக்கள் போராட்டங்களினால் அண்மைய நாட்களாக ஆபிரிக்காவின் சில பகுதிகளிலும், அரபுலகின் சில நாடுகளிலும் ஆட்சியதிகாரத்திலிருக்கின்ற ஆட்சியாளர்கள் பெரும் நெருக்கடியில் மாட்டிக்கொண்டுள்ளனர். தினியூசிவாவில் தொடங்கிய மக்கள் புரட்சி எகிப்து, யேமன், மொராக்கோ, பஹ்ரெயின், அல்ஜீரியா, அங்கோலா, ஈரான், ஈராக், லிபியா தேசம்வரையும் பரந்துவியாபித்துள்ளது.

அந்தவகையில், உலகில் நீண்டகாலம் பதவிவகித்த/வகிக்கின்ற ஜனாதிபதி, பிரதமர் சிலரினைப் பார்ப்போம் ....

பிடல் காஸ்ட்ரோ ~ கியூபா



கியூபா நாட்டினை ஆட்சிசெய்த சர்வாதிகாரியினை ஆட்சியதிகாரத்திலிருந்து புரட்சிமூலம் தூக்கியெறிந்து கியூபாவில் கம்யூனிஸ்ட் ஆட்சியினை ஏற்படுத்திய பெருமைக்குரியவர். 1959ம் ஆண்டு புரட்சிக்குப் பின்னர் சுமார் 50 ஆண்டுகள் ஆட்சிசெய்த பிடல் காஸ்ட்ரோ, உடல்நல பாதிப்புக்குள்ளாகியதையடுத்து 2008ம் ஆண்டு தனது சகோதரர் ராவுல் காஸ்ட்ரோவிடம் ஆட்சியதிகாரத்தினை கையளித்தார்.


கேணல் முஅம்மர் கடாபி ~ லிபியா


வாழ்வா...! சாவா...! போராட்டத்தில் கடாபி

லிபிய நாட்டின் மன்னராக விளங்கிய இதிரிஸ் வைத்திய பரிசோதனைக்காக துருக்கிக்கு சென்றிருந்தவேளை, 1969ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1ம் திகதி கனிஷ்ட இராணுவ அதிகாரிகளால் இரத்தம் சிந்தாத புரட்சி மூலம் மன்னராட்சி கவிழ்க்கப்பட்டு 27வயதில் கேணல் கடாபி லிபியா நாட்டின் தலைவராக முடிசூடிக்கொண்டார்.

லிபியா நாட்டில் கேணல் கடாபி 41 ஆண்டுகளாக தனது சர்வாதிகார ஆட்சியினை மேற்கொண்டுவருகின்றார். அண்மைய நாட்களில் லிபியாவில் உக்கிரம் பெற்றிருக்கின்ற மக்கள் போராட்டங்களினால் சர்வாதிகாரி கடாபி பதவியிலிருந்து அகற்றப்படும் காலம் வெகுதொலைவில் இல்லை எனலாம்.


கலிபா பின் சுல்மான் அல் கலிபா ~ பஹ்ரெய்ன்
பஹ்ரெய்ன் நாடானது பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்றதிலிருந்து பஹ்ரெய்ன் நாட்டின் பிரதமராக கலிபா பின் சுல்மான் அல் கலிபா 1971ம் ஆண்டிலிருந்து இன்றுவரையும் பிரதமராக ஆட்சியிலிருக்கின்றார். 40 ஆண்டு காலமாக ஆட்சியிலிருக்கும் இவருக்கெதிராக, அண்மைய நாட்களில் தொடர்ச்சியாக நிகழ்ந்துவருகின்ற மக்கள் கிளர்ச்சியினால் பெரும் நெருக்கடியினை எதிர்நோக்கிவருகின்றார்.

ஹொஸ்னி முபாரக் ~ எகிப்து




எகிப்து நாட்டின் ஜனாதிபதியாக விளங்கிய அன்வர் எல் சதாத் 1981ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 06ம் திகதி சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து 1981ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 14ம் திகதி எகிப்து நாட்டின் ஜனாதிபதி பதவியினை கைப்பற்றிக்கொண்டார். சுமார் 30 ஆண்டுகளாக எகிப்தினை ஆட்சிசெய்துவந்த ஹொஸ்னி முபாரக், மக்கள் போராட்டங்களினால் தொடர்ந்து 2011ம் ஆண்டு பெப்.-11ம் திகதி தனது பதவியினை இராஜிநாமா செய்தார்.

றொபட் முகாபே ~ சிம்பாப்வே
1980ம் ஆண்டு பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்றதிலிருந்து சிம்பாப்வே நாட்டின் அரச தலைவராக றொபட் முகாபே இன்றுவரையும் பதவிவகிக்கின்றார். முகாபே 1980ம் ஆண்டு முதல் 1987ம் ஆண்டுவரை பிரதமராகவும், 31 டிசம்பர் 1987இலிருந்து இன்றுவரையும் சிம்பாப்வே நாட்டின் ஜனாதிபதியாக ஆட்சிசெய்துவரும் முகாபேக்கு எதிராக எதிர்க்கட்சிகளினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களினை தொடர்ந்து எதிர்க்கட்சித்தலைவர் மோகன் தஸ்வான்கிராய் பிரதமராக 2009ம் ஆண்டு பதவியேற்றார். உலகில் பணவீக்கம் உயர்ந்தபட்சத்தில் உள்ள நாடாக சிம்பாப்வே விளங்குவதற்கு முகாபேயின் 31 ஆண்டு கால ஆட்சியே காரணமாகும்.

அலி அப்துல்லா சாலெஹ் ~ யேமன்
அலி அப்துல்லா சாலெஹ், யேமன் நாட்டின் ஜனாதிபதியாக 1978ம் ஆண்டிலிருந்து இன்றுவரையும் ஆட்சி செய்துவருகின்றார். 33 ஆண்டு காலமாக ஆட்சியிலிருக்கும் இவருக்கெதிராக, அண்மைய நாட்களில் தொடர்ச்சியாக நிகழ்ந்துவருகின்ற மக்கள் கிளர்ச்சியினால் பெரும் நெருக்கடியினை எதிர்நோக்கிவருகின்றார்.

ஜோஸ் சன்டோஸ் ~ அங்கோலா
ஜோஸ் சன்டோஸ், அங்கோலா நாட்டின் ஜனாதிபதியாக 1979ம் ஆண்டிலிருந்து இன்றுவரையும் ஆட்சி செய்துவருகின்றார். 32 ஆண்டு காலமாக ஆட்சியிலிருக்கும் இவருக்கெதிராக, அண்மைய நாட்களில் தொடர்ச்சியாக நிகழ்ந்துவருகின்ற மக்கள் கிளர்ச்சியினால் பெரும் நெருக்கடியினை எதிர்நோக்கிவருகின்றார்.

ஒமர் பொங்கோ ~ காபொன்
1967ம் ஆண்டு டிசம்பர் 2ம் திகதி காபொன் நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்ற ஒமர் பொங்கோ, தான் இறக்கும்வரையும்(2009ம் ஆண்டு ஜூன், 8) காபொன் நாட்டினை 42 ஆண்டுகளாக ஆட்சிசெய்தார்.

சுகார்ட்டோ ~ இந்தோனேசியா
1967ம் ஆண்டு சுகர்னோவிடமிருந்து ஆட்சியினை கைப்பற்றி 1998ம் ஆண்டுவரை இந்தோனேசியாவினை 31 ஆண்டுகள் ஆட்சிசெய்த சுகார்டோ மக்கள் எதிர்ப்பினையடுத்து பதவிவிலகினார். சுகார்ட்டோ 2008ம் ஆண்டெ பெப்ரவரியில் காலமானார்.


***

No comments:

Blog Widget by LinkWithin