Wednesday, October 17, 2012

உலகினை அச்சுறுத்தும் உலகளாவிய உணவு நெருக்கடியும், வறுமையும்...!

உலகளாவியரீதியில், வருடாந்தம் அக்டோபர் மாதம் 16ம் திகதி உலக உணவு தினமாகக் கொண்டாடப்படுகின்றது. 1979ம் ஆண்டு  இடம்பெற்ற  உணவு விவசாய அமையத்தின் மாநாட்டில், அக்டோபர் மாதம் 16ம் திகதி உலக உணவு தினமாக பிரகடனம் செய்துவைக்கப்பட்டது. உலக உணவுப் பிரச்சினைகள் தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்தல், பசி, பட்டினி, போசணைக்குறைபாடு, வறுமை ஆகியவற்றிக்கெதிராக மக்களிடையே ஒற்றுமையினை பலப்படுத்துதல் ஆகியவற்றினை உலக உணவு தினமானது நோக்கமாகக் கொண்டுள்ளது.


இதேவேளை உலகளாவியரீதியில், வருடாந்தம் அக்டோபர் மாதம் 17ம் திகதி வறுமையினை எதிர்த்துப் போராடுவதற்கான சர்வதேச தினமாகக் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. வறுமையானது மனித உரிமைக்கெதிரான வன்முறையாகவே நோக்கப்படுகின்றது. இத்தினமானது 1993ம் ஆண்டு முதல் அனுஷ்டிக்கப்படுகின்றது.



ஐக்கிய நாடுகள் சபையின் புள்ளிவிபரங்களின் பிரகாரம், உலகளாவியரீதியில் 1பில்லியனுக்கும் அதிகமான மக்கள் பசி, பட்டினியின் காரணமாக பாதிப்புற்றுள்ளனர்.
சனத்தொகை வளர்ச்சி, காலநிலை மாற்றங்கள்,  வானிலையுடன் தொடர்புடைய பயிர் பிரச்சினைகள், நீர்வழங்கல் வீழ்ச்சி, எரிபொருள் விலை, தாவர எரிபொருட்கள் உற்பத்திக்கு உணவுப் பொருட்கள் பயன்படுத்தல்,  நிலப்பற்றாக்குறை ஆகிய காரணிகள் தற்போதைய உலக உணவு அதிகரிப்பில் செல்வாக்கு செலுத்தியுள்ளன.
2050ம் ஆண்டளவில், உலக சனத்தொகையானது 6.8 பில்லியனிலிருந்து 9.1 பில்லியனாக அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை எதிர்வருகின்ற ஆண்டுகளில் உலகில் பாரியளவிலான உணவு நெருக்கடி ஏற்படலாம் என ஐ. நா எச்சரிக்கை மணி அடித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.


சில புள்ளிவிபரத்தகவல்கள்......
Ø    உலக சனத்தொகையில் ஆறில் ஒரு பங்கிற்கும் அதிகமான மக்கள் தொகையினர் பசி, பட்டினியால் வாடுகின்றனர். இதில் அதிகமானோர் பெண்களும், குழந்தைகளும் ஆவர்.

Ø    உலகில் பசி, பட்டினியுடன் வாழ்பவர்களில் 50% இற்கும் அதிகமானோர் இந்தியாவிலேயே வாழ்கின்றனர். மேலும் 46% இற்கும் அதிகமான குழந்தைகள் போசணைக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளன.

Ø    உலக உணவு விலை அதிகரிப்பானது அபிவிருத்தி அடைந்துவருகின்ற நாடுகளில் வாழுகின்ற ஏழை மக்களினையே பெரிதும் பாதிக்கின்றது. அவர்கள் தமது வருமானத்தில் 60 % - 80% ஆன பங்கினை உணவிலேயே செலவிடுகின்றனர்.

Ø    ஐ. நா தகவல்களின் பிரகாரம், வருடாந்தம் 25000 குழந்தைகள் பசி, மற்றும் பசியுடன் தொடர்புடைய நோய்களின் காரணமாக மரணிக்கின்றனர். அதாவது 5 செக்கன்களுக்கு 1 குழந்தை உலகளாவிய ரீதியில் மரணிக்கின்றது.

Ø    கடந்த 3 வருடங்களில் உலக உணவு விலையானது ஏறத்தாழ 2 மடங்காக அதிகரித்துள்ளது. ஆனால் 2007 ஏப்ரல் தொடக்கம் 2008 ஏப்ரல் வரையான காலப்பகுதியில் உலக உணவு விலையானது 80% ஆல் அதிகரித்துள்ளது.

Ø    ஐ. நா உணவு விவசாய அமையத்தின் தகவல்களின் பிரகாரம் (2010ம் ஆண்டு) உலகளாவியரீதியில் 925 மில்லியன் மக்கள் போசணைக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர், இதில் 98% ஆன பங்கினர் அபிவிருத்தி அடைந்துவருகின்ற நாடுகளிலேயே வாழ்கின்றர்.

Ø    உலக மக்களில் அரைப்பங்கிற்கும் அதிகமானோர் குறைந்த வருமான மட்டத்தின்கீழ் வாழ்கின்றனர். உணவுப்பற்றாக்குறையினை எதிர்நோக்குகின்ற நாடுகள் தமது மக்களுக்கு தேவையான உணவினை உற்பத்தி அல்லது இறக்குமதி செய்யக்கூடிய இயலுமையினைக் கொண்டிருக்கவில்லை.

Ø    உலகிலுள்ள குழந்தைகளில் மூன்றிலொரு பங்கிற்கும் அதிகமான குழந்தைகள் போசணைக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளன.

Ø    1900ம் ஆண்டளவில் ஒவ்வொரு மனிதனுக்கும் 8 ஹெக்டெயர் என்றளவிலிருந்த நிலப்பரப்பானது  தற்சமயம் 1.63 ஹெக்டெயர் என வீழ்ச்சியடைந்துள்ளது.

Ø    வருடாந்தம் உலக உணவு உற்பத்தியானது 32 மில்லியன் தொன்களால் அதிகரிக்கின்ற அதேவேளை வருடாந்த உணவுத் தேவையானது 44 மில்லியன் தொன்களால் அதிகரிக்கின்றது.

Ø    ஒரு கிலோகிராம் கோதுமை மாவினை உற்பத்தி செய்ய 1000 லீற்றர் தண்ணீர் தேவைப்படிகின்ற அதேவேளை ஒரு கிலோகிராம் அரிசியினை உற்பத்தி செய்ய 3000 லீற்றர் தண்ணீர் தேவைப்படுகின்றதாம்.

Ø    அவுஸ்திரேலியாவின் உணவு உற்பத்தியில் 93% ஆன பங்கினை அந்த நாட்டு மக்களே நுகர்கின்றனர். குறிப்பாக, அவுஸ்திரேலிய உணவு உற்பத்தியானது உலக உணவு உற்பத்தியில் 1% வகிபாகத்தினை வகிக்கின்றது. உற்பத்தியில் 3% ஆனவையே உலகளாவிய வர்த்தகத்தில் பரிமாறிக்கொள்ளப்படுகின்றன.

Ø    1984ம் ஆண்டு எதியோப்பியாவில் ஏற்பட்ட பஞ்சத்தின் காரணமாக 1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இறந்தனராம்.

Ø    1932/33ம் ஆண்டு உக்ரேனில் ஏற்பட்ட பஞ்சத்தின் காரணமாக 6-7 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இறந்தனராம். இது அந்த நாட்டு மக்கள் தொகையில் 20% இற்கும் அதிகமாகுமாம்.

***

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

விளக்கமான அறியாத பல தகவல்கள்...

நன்றி...

ஆத்மா said...

நல்ல தகவல்கள்
உணவுகளை விரயம் செய்பவர்கள் சிந்தித்தால் சரிதான்

கே.கே.லோகநாதன் - KK Loganathan [B.Com] said...

நன்றிகள் சகோ...

Blog Widget by LinkWithin