Saturday, August 25, 2012

ஈமு பறவைகள்...!!!


அண்மைய நாட்களில் இந்தியாவின் தமிழ் நாட்டில் ஈமு பண்ணைகளை நடாத்திவந்த பண்ணையாளர்கள் பெருமளவு பணத்தினை சுருட்டிக்கொண்டு தலைமறைவாக ஈமு பறவைகள் உணவின்றி செத்துமடிவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

ஈமு பறவைகள் தொடர்பான சிறு பார்வை.........



அவுஸ்திரேலிய நாட்டினை பூர்வீகமாகக் கொண்ட ஈமு பறவைகள் அந்த நாட்டின் தேசியப் பறவையும் ஆகும். தீக்கோழிகளினையடுத்து உலகில் மிக உயரமான பறவை வகையினைச் சேர்ந்தவை ஈமு பறவைகள் ஆகும். இவை சராசரியாக 6 - 6.5 அடி (1.5 - 2 மீற்றர்) உயரம் வரை வளரக்கூடியவை அத்துடன் இவற்றின் சராசரி நிறை 50 - 55 கிலோகிராமிற்கும் அதிகமானதாகும். ஈமு பறவைதான் பின்னோக்கி நடக்கமுடியாத ஒரே பறவை வகை ஆகும்.

ஈமு(Emu) என்ற வார்த்தை அரபு மொழியிலிருந்து பிறந்ததாகும், இதற்கான அர்த்தம் மிகப் பெரியவை என்பதாகும். இதன் விலங்கியல் பெயர் Dramaius Novahollandiae ஆகும்.

அவுஸ்திரேலியாவின் குளிர் மலைப் பிரதேசங்கள், புதர் மற்றும் மரங்கள் நிறைந்த வரண்ட நிலப்பகுதி மற்றும் சமவெளிகளில் ஈமு பறவைகள் 80 மில்லியன் ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்துவருகின்றன. பொதுவாக இவை அடர் வனங்கள், பாலைவனங்களில் வசிப்பதனை தவிர்த்துவருகின்றன. 



தீக்கோழி, கிவி பறவைகளினைப் போன்றே பறக்கமுடியாத பறவை வகையினைச்(Ratites) சேர்ந்த  ஈமு பறவைகள் மிக வேகமாக ஓடக்கூடியவை ஆகும், இவற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 31 மைல்களுக்கும்(50கிலோமீற்றர்) அதிகமாகும். அத்துடன் ஈமு பறவைகள் வேகமாக நீந்தக்கூடிய ஆற்றல் கொண்டவையுமாகும்.

ஈமு பறவைகளுக்கு  நீர் நிறைந்த குட்டைகளில் விளையாடுவது ரொம்ப பிடித்தமானதாகும்.


கம்பளிப்பூச்சிகளே இவற்றின் விருப்பமான உணவாகும், அத்துடன் வெட்டுக்கிளிகள், புற்கள், பூக்கள், பழங்கள், விதைகள், தளிர்கள் , வண்டுகள் ஆகியவற்றினையும், சில வேளைகளில்  இவை கற்களையும் உட்கொள்ளும்.
சில வேளைகளில் ஈமு பறவைகள் உணவினைத்தேடி 15 25 கிலோமீற்றர் தூரம் பயணிக்குமாம்.

ஈமு பறவைகள் ஒரு ஒழுங்குமுறைக்கமைய நீரினை குடிக்கின்றன. அவை நீரினை வீணாக்குவதில்லை,  அவை ஒரு நாளில் 3 கலன்கள் நீரினையும் அருந்தும் தன்மையும் கொண்டவையாகும்.

ஈமு பறவைகளில் ஆண் பறவைகளினைவிடவும் பெண் பறவைகள் உயரமானவையாகும். காடுகளில் வாழ்கின்ற ஈமு பறவைகளின் சராசரி ஆயுட்காலம் 5 10 ஆண்டுகளாகும்.

ஈமு பறவைகளின் எதிரிகள் டிங்கோ, கழுகுகள், பூனைகள், நரிகள், நாய்கள் மனிதர்கள் ஆகியனவாகும். இதன் முட்டைகளுக்கு பல்லிகளே எதிரிகளாகும்.

ஆண் ஈமு பறவைகள்  நிலத்தில் குழி தோண்டி மரப்பட்டைகள், புற்கள், மரக் குச்சிகள், இலைகள் ஆகியவற்றினைப் பயன்படுத்தி சொரசொரப்பான கூட்டினை அமைக்கின்றன.  ஈமு பறவைகளின் கூடுகள் 1.5 மீற்றர் அகலம் கொண்டதாகும்.

பெண் ஈமு பறவைகள் 2 3 வயதினை அடையும்போது முட்டையிட  ஆரம்பிக்கும். பொதுவாக 2 - 4 நாட்களுக்கொரு தடவை 1 முட்டை வீதம் சராசரியாக 20 30 முட்டைகளினை மார்ச் - ஒக்டோபர் வரையான முட்டையிடும் காலப்பகுதியில் கருமைப்பச்சை நிறத்தில் முட்டைகளையிடுகின்றன. இதன் முட்டையொன்று 0.4 0.9 கிலோகிராம் நிறையுடையதாகும்.

பெண் ஈமு பறவைகள் 5 11 முட்டைகளை கூட்டில் இட்ட பின் , ஆண் ஈமு பறவைகள் முட்டை மேலேறி அமர்ந்து அடைகாக்கும், இதன் போது அவை உணவின்றி, நீரின்றி குஞ்சு பொரிக்கும்வரை 8 வாரங்களாக அடைகாக்கும் ஆற்றல்கொண்டவையாகும். குஞ்சுகள் பொரித்து 24  மணித்தியாலத்திற்குள் அவை நடக்கும் ஆற்றலை பெற்றுவிடுகின்றன. 



முட்டையிட்ட பின் பெண் ஈமு பறவைகள் இனப்பெருக்கத்திற்காக வேறுதிசை நாடிச் சென்றுவிடுவதனால் ஆண் ஈமு பறவைகளே அடைகாப்பது முதல் அதன் குஞ்சுகளை 18 மாதங்கள்வரையும் தன்னுடன் பராமரித்துக்கொள்கின்றன.

மாமிசத்திற்காகவும், எண்ணெய் உற்பத்திக்காகவும், தோல் பொருட்கள் உற்பத்திக்காகவும், இதன் முட்டைக்கோதுகள் அலங்கார வேலைப்பாடுகளுக்கும் பங்களிப்பதால் உலகின் பல நாடுகளில் ஈமு பறவைகள் பண்ணைகளில் வளர்க்கப்படுகின்றன.

***

3 comments:

MARI The Great said...

நல்ல பதிவு நண்பா!

geevanathy said...

புதிய விடையம்
நன்றி நண்பரே

கே.கே.லோகநாதன் - KK Loganathan [B.Com] said...

நன்றிகள் நண்பர்களே....

Blog Widget by LinkWithin