Thursday, October 27, 2011

1000 ஆண்டுகளுக்கும் அதிகமான வாழ்நாளைக் கொண்டுள்ள தாவரம் ....!!!



பார்ப்பதற்கு ஒக்டோபஸ் போன்று காட்சியளிக்கும் வெல்விட்ச்சியா என்கின்ற இந்த தாவரத்தின் சிறப்பியல்பு யாது தெரியுமா ?.... 1000 ஆண்டுகளுக்கும் அதிகமான வாழ்நாட்களைக் கொண்டுள்ள வெல்விட்ச்சியா, ஆபிரிக்காவின் நமீபியா மற்றும் அங்கோலா ஆகிய நாடுகளின் பாலைவனங்களில் வளர்கின்றன. வெல்விட்ச்சியா தாவரமானது இரண்டு இலைகளைக் கொண்டுள்ளன, அவை பல்வேறு சிறிய துண்டுகளாக வளர்கின்றன. வெல்விட்ச்சியா தாவரமானது பாலைவனத்திலுள்ள சிறிய விலங்குகளுக்கு தங்குமிடமாக விளங்குகின்றன அத்துடன் இவை பாலைவன வாழ்க்கையில் முக்கிய வகிபாகத்தினை வகிக்கின்றன.



இந்த தாவரமானது 2 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியதாகும்.வெல்விட்ச்சியா அருகிவரும் தாவரங்களில் ஒன்றாக இருப்பதனால் வர்த்தக நடவடிக்கைகளுக்கு தடை செய்யப்பட்டிருப்பினும் அதனது விதைகளுக்காக காடுகளிருந்து சட்டவிரோதமாக விலைபோகின்றன.

இந்த இனங்கள் சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதனால் இவை பெரும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்தவையாக விளங்குகின்றன.



இந்த தாவரத்தினை முதன்முதலில் கண்டுபிடித்தவர் ஒஸ்ரியா நாட்டினை சேர்ந்த தாவரவியலாளர் பிரீட்ரிச் வெல்விட்ச்(1806-1872) ஆவார் . இவர் 1860ம் ஆண்டு அங்கோலா நாட்டின் தன் பாகத்திலுள்ள நமிப் பாலைவனத்தில் கண்டுபிடித்தார். பிரீட்ரிச் வெல்விட்ச் மகத்தான தாவரவியல் ஆராய்ச்சிக்காகவும், முதன்முதலில் கண்டறிந்து சேகரித்தமைக்காகவும் இத்தாவரமானது அவரின் பெயரிலேயே அழைக்கப்படுகின்றது.

***

Friday, October 21, 2011

லிபியாவின் தேசியக்கொடியினை மாற்றியமைத்த கடாபி……

லிபியாவில், அண்மைய மாதங்களில் வெடித்த மக்கள் புரட்சியின் உச்சக்கட்டமாக சர்வாதிகாரி முஅம்மர் கடாபி நேற்றைய தினம் கொலைசெய்யப்பட்டதனைக் குறிப்பிடலாம்.



1951ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ம் திகதி காலனித்துவ ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்ற லிபியா தேசத்தின் மன்னர் இத்திரிஸ்சின் ஆட்சியினை 1969ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1ம் திகதி கேணல் முஅம்மர் கடாபி தலைமையிலான கனிஷ்ட இராணுவ அதிகாரிகளால் இரத்தம் சிந்தாத புரட்சி மூலம் மன்னராட்சி கவிழ்க்கப்பட்டு 27வயதில் கேணல் முஅம்மர் கடாபி லிபியா நாட்டின் ஆட்சித் தலைவனாக முடிசூடிக்கொண்டான்.

ஆட்சிப் பொறுப்பினை கையகப்படுத்திய கேணல் முஅம்மர் கடாபி தனது ஆட்சிக்காலத்தில் லிபிய நாட்டின் தேசியக் கொடியில் பல்வேறு மாறுதல்களை ஏற்படுத்தினான்.

லிபியா நாட்டின் தேசியக்கொடி மாற்றியமைக்கப்பட்ட சந்தர்ப்பங்கள்:



சுதந்திர லிபியா தேசமானது தமது முதலாவது தேசியக்கொடியினை 1951ம் உள்வாங்கிக்கொண்டது. இந்த தேசியக்கொடியானது 1969ம் ஆண்டுவரையும் நடைமுறையிலிருந்தது.



1969ம் ஆண்டு ஆட்சியினைக் கைப்பற்றிய சர்வாதிகாரி கடாபி, சுதந்திர லிபியா தேசத்தின் தேசியக் கொடியினை மாற்றியமைத்தான். இந்த தேசியக்கொடியானது 1972ம் ஆண்டுவரை நடைமுறையிலிருந்தது.


1972ம் ஆண்டு லிபியா அரபு குடியரசு ஒன்றியத்தில் இணைந்ததையடுத்து லிபிய தேசத்தின் தேசியக் கொடியினை சர்வாதிகாரி கடாபி மீண்டும் மாற்றியமைத்தான். இந்த தேசியக்கொடியானது 1977ம் ஆண்டுவரை நடைமுறையிலிருந்தது.



சர்வாதிகாரி கடாபி, லிபியா தேசத்தின் தேசியக் கொடியினை மீண்டும் 1977ம் ஆண்டு மாற்றியமைத்து புதியதொரு தேசியக்கொடியினை அறிமுகப்படுத்தினான். இந்த தேசியக்கொடியானது முழுமையாக பச்சை நிறத்தினை மாத்திரம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டது. இந்த தேசியக்கொடியின் சிறப்பியல்பு யாதெனில்; தனது நாட்டின் தேசியக்கொடியில் வடிவமைப்புக்கள், சின்னங்கள், அல்லது ஏனைய விபரங்களின்றி முழுமையாக ஒரே வர்ணத்திலான(பச்சை) தேசியக்கொடியினை கொண்ட ஒரே நாடு லிபியாவாகும்.
பச்சை நிறமானது இஸ்லாம் மதத்தின் அடையாளமாகும், நீண்ட பக்தி மற்றும் மக்கள் அவர்களின் மதம் மீது கொண்ட மரியாதையினை வலியுறுத்துகின்றது.
அத்துடன் பச்சை நிறமானது லிபியா நாட்டின் தேசிய நிறமுமாகும்.

இந்த தேசியக்கொடியிலுள்ள பச்சை நிறமானது கடாபியின் பசுமைப் புரட்சியினைக் குறிப்பிடுவதாகும்.

சர்வாதிகாரி கடாபியின் மறைவுடன் லிபிய நாட்டின் 1951ம் ஆண்டிலிருந்து 1969ம் ஆண்டுவரை நடைமுறையிலிருந்த தேசியக்கொடியானது லிபியாவின் புதிய தேசியக்கொடியாக மீண்டும் புத்துயிர் பெறுகின்றது.

***

கடாபியுடன் தொடர்புடைய எனது முன்னைய பதிவு: உலகில் நீண்டகாலம் பதவிவகித்த ஆட்சியாளர்கள்....


***

Wednesday, October 19, 2011

கலைமான்கள் பாசியினை விரும்பிச் சாப்பிடுவது ஏன் தெரியுமா?.........



அதிகமான விலங்குகள் பாசியினை சாப்பிடுவதில்லை. ஏனெனில் பாசியானது சமிபாடடடைய கடினமானதுடன் குறைந்தளவான ஊட்டச்சத்தையே கொண்டுள்ளன. ஆனால் Reindeer என்கின்ற ஒருவகை கலைமான்கள் அதிகளவான பாசிகளினை உட்கொண்டு தமது வயிற்றினை நிரப்பிக்கொள்கின்றன. பாசியானது விசேடமான இரசாயனங்களைக் கொண்டிருக்கின்றன, இந்த இரசாயனமானது Reindeer என்கின்ற ஒருவகை கலைமான்கள் தமது உடல் திரவியங்களை சூடாக வைத்திருப்பதற்கு உதவுகின்றன.



Reindeer பனி சூழ்ந்த ஆர்ட்டிக் பிராந்தியத்தில் தமது வருடாந்திர பயணத்தினை மேற்கொள்கின்றபோது பாசியிலுள்ள இரசாயனம் Reindeer குளிரில் உறைவடைவதிலிருந்து பாதுகாக்கின்றது.

***

Tuesday, October 4, 2011

வாழ்க்கை என்பது எது ?.. அன்னை திரேசா மொழிந்தது ........



வாழ்க்கை என்பது எது தெரியுமா? ...........

" வாழ்க்கை ஒரு வாய்ப்பாகும், அதிலிருந்து நன்மையை பெற்றுக்கொள் ; வாழ்க்கை அழகானது , அதனை ரசி ; வாழ்க்கை ஒரு கனவு , அதனை உணரு ; வாழக்கை சவாலானது , அதனை எதிர்கொள் ; வாழ்க்கை ஒரு கடமை , அதனை பூரணப்படுத்து ; வாழ்க்கை ஒரு விளையாட்டு , அதனை விளையாடு ; வாழ்க்கை சத்தியமானது, அதனை நிறைவேற்றிக்கொள் ; வாழ்க்கை துன்பகரமானது , அதனை சமாளிக்க கற்றுக்கொள் ; வாழ்க்கை ஒரு பாடல், அதனை பாடு ; வாழ்க்கை ஒரு போராட்டம் , அதனை ஏற்றுக்கொள் ; வாழ்க்கை சோகமானது , அதனை எதிர்கொள் ; வாழ்க்கை சாகசமானது , அதனை துணிகரமாக்கு; வாழ்க்கை அதிர்ஷ்டமானது , அதனை உருவாக்கு ; வாழ்க்கை வாழ்க்கைதான் , அதற்காக போராடு " - அன்னை திரேசா

***

Saturday, October 1, 2011

100வது டெஸ்ட் போட்டி அறிமுகம் தொடர்பான சில சிறப்புத் தகவல்கள்……..!!!

அண்மையில் இலங்கையில் நடைபெற்று முடிந்த ஆஸி – இலங்கை அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரில் 3வது டெஸ்ட் போட்டியானது இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர் குமார் சங்கக்காரவின் 100வது டெஸ்ட் போட்டியாகும். உலகளவில் 100 டெஸ்ட் போட்டிகளைக் கடந்த 50வது வீரராக குமார் சங்கக்கார விளங்குகின்றார்.

அந்தவகையில் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 100வது டெஸ்ட் போட்டி அறிமுகம் தொடர்பிலான சில சுவையான தகவல்கள் உங்களுக்காக……

 டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 100டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமைக்குரியவர் இங்கிலாந்து நாட்டினைச் சேர்ந்த கொலின் கெளவ்ட்ரி ஆவார். தனது முதல் டெஸ்ட் போட்டி அறிமுகத்தினை பிறிஸ்பேனில் அவுஸ்திரேலிய அணிக்கெதிராக 1954-55 பருவகாலத்தில் மேற்கொண்ட கொலின் கெளவ்ட்ரி, தனது 100வது டெஸ்ட் போட்டியினை எட்வஸ்டனில் அவுஸ்திரேலிய அணிக்கெதிராக 1968ம் ஆண்டு பருவகாலத்தில் மேற்கொண்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

 டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிக இள வயதில் 100 டெஸ்ட் போட்டிகளை கடந்த வீரராக இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் விளங்குகின்றார். 1989/90 பருவகாலத்தில் பாகிஸ்தான் அணிக்கெதிராக கராச்சி டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகிய சச்சின் 29 வயது 134 நாட்களில் 2001 செப்டெம்பர் 15ம் திகதி இங்கிலாந்து அணிக்கெதிரான ஓவல் டெஸ்ட் போட்டியில் தனது 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடியமை குறிப்பிடத்தக்கதாகும்.


 டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே டெஸ்ட் போட்டியில் இரண்டு வீரர்கள் தமது 100வது டெஸ்ட் போட்டியில் கால்பதித்த சந்தர்ப்பங்கள் இரண்டு பதிவாகியுள்ளது.
*** 2000ம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் மே.தீவுகள் அணிகளுக்கிடையிலான மன்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் முன்னாள் அணித்தலைவர்களான மைக் அதர்ட்டன் மற்றும் அலெக் ஸ்டுவர்ட் ஆகியோரும்,
*** 2006ம் ஆண்டு ஏப்ரல் 15ம் திகதி தென்னாபிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான சென்சூரியன் டெஸ்ட் போட்டியில் சோன் பொல்லக் மற்றும் ஜக் கலிஸ் ஆகியோர் தமது 100 டெஸ்ட் போட்டியினை ஒரே டெஸ்ட் போட்டியில் பதிவுசெய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிக விரைவாக 100 டெஸ்ட் போட்டிகளை கடந்த வீரராக அவுஸ்திரேலிய அணியின் மார்க் வோ திகழ்கின்றார். 1990/91 பருவகாலத்தில் இங்கிலாந்து அணிக்கெதிராக அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான மார்க் வோ 8 வருடங்கள் 342 நாட்களில் தனது 100வது டெஸ்ட் போட்டியினை 1999/00ஆம் ஆண்டு பருவகாலத்தில் இந்திய அணிக்கெதிராக சிட்னி டெஸ்ட் போட்டியில் பூர்த்திசெய்துகொண்டார்.

 டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிக மெதுவாக 100 டெஸ்ட் போட்டிகளை கடந்த வீரராக மே.தீவுகள் அணியின் கிளைவ் லொய்ட் திகழ்கின்றார். 1966/67 பருவகாலத்தில் இந்திய அணிக்கெதிராக மும்பாய் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான கிளைவ் லொய்ட் 17 வருடங்கள் 137 நாட்களில் தனது 100வது டெஸ்ட் போட்டியினை 1983-84 பருவகாலத்தில் அவுஸ்திரேலிய அணிக்கெதிராக கிங்ஸ்டன் டெஸ்ட் போட்டியில் பங்குபற்றி பூர்த்திசெய்துகொண்டார்.


100வது டெஸ்ட் தொடர்பிலான எனது முன்னைய பதிவு - தனது 100வது போட்டியில் சதம் பெற்ற வீரர்கள்

***
Blog Widget by LinkWithin