Friday, January 14, 2011

வரலாறுகாணாத வெள்ளமும், நெற்செய்கையும்.......

கடந்த பல வாரங்களாகப் பொழிந்த அடைமழை நேற்று ஓய்ந்ததனால் தேங்கி நின்ற வெள்ளம் வடிந்தோடிவருகின்றது. ஆனாலும் நலன்புரி முகாம்களில் உள்ள மக்கள் தமது இருப்பிடங்களுக்கு முழுமையாக திரும்பவில்லை. அத்துடன் கடும் குளிரினால் மக்கள் அவதியுறுகின்றனர்.

ïவரலாறுகாணாத வெள்ளப் பெருக்கினால் னங்காடு தில்லையாறு பாரியளவில் பெருக்கெடுத்து பிரதான பாதையினை ஊடறுத்துப் பாய்ந்த காட்சி....




படம் 1 ~ ஜனவரி 10, 2011, 12:01 PM



படம் 2 ~ ஜனவரி 11, 2011, 11:39 AM



இயற்கை அனர்த்தத்தினால் பாதிப்புக்குள்ளாகிய மக்களுக்கு நிவாரணங்களை வழங்க ஒத்துழைக்கின்ற ஊடகங்கள், தொழில் நிறுவனங்கள், மற்றும் பதிவர் குழாமுக்கு பாராட்டுக்கள்.

உழவுத் தொழிலுக்கு உதவிசெய்த சூரிய பகவானுக்கு நன்றி செலுத்துவதற்காக பொங்கலிட்டு வழிபாடு செய்கின்ற திருநாளே தைப்பொங்கல் பண்டிகையாகும்.

ஆனாலும் அண்மைய நாட்களில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தினால் நெற்செய்கை முற்றுமுழுதாக பாதிக்கப்பட்டு விவசாயிகள் பலத்த இழப்பினை சந்தித்துள்ளனர்.

அந்தவகையில், இலங்கையில் இந்த வருட தைப்பொங்கல் பண்டிகை களை கட்டவில்லை.



நெல் தொடர்பிலான சுவையான தகவல்கள்.........




 உலகில் நெல்லானது (குடும்பப் பெயர் ~ ஒறைசா சற்றைவா) கி.மு 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பயிரிடப்பட்டு வருகின்றது.

 உலகில், பயிரிடக்கூடிய 14000 இற்கும் மேற்பட்ட நெல்லினங்கள் இருப்பினும், சில குறிப்பிட்ட இனங்களே(100+) தொடர்ந்து நிலைத்திருக்கின்றனவாம்.

 பாரம்பரிய முறையில் 1ஹெக்டெயரில் நெல் விதைப்பினை மேற்கொள்வதற்காக ஒரு விவசாயி, 80 கிலோமீற்றருக்கும் அதிகமாக தூரம் மாட்டுடன் நடக்கின்றானாம்.

 1கிலோகிராம் நெல்லினை உற்பத்தி செய்வதற்கு 5000 லீற்றர் நீர் தேவைப்படுகின்றதாம்.

 உலக அரிசி உற்பத்தியானது 430 மில். மெற்றிக் தொன்களாக இருப்பதோடு இதில் 90% இற்கும் அதிகமான உற்பத்தியும், நுகர்வும் ஆசிய நாடுகளைச் சார்ந்ததாகும். அத்துடன் உலக மக்களின் அரைவாசிப் பங்கினரின் அடிப்படை உணவாகவும் அரிசி விளங்குகின்றது.

 உலகில் மில்லியன் கணக்கான ஏழை மக்கள், தமது வருமானத்தில் 50 – 75 சதவீதத்தினை அரிசியின் நுகர்வில் செலவிடுகின்றனர்.

 உலகில் அதிக சனத்தொகையினைக் கொண்ட 4 நாடுகளில் 3 நாடுகள் அரிசியினை மையப்படுத்திய சமூகத்தினையே கொண்டிருக்கின்றது. அவையாவன, மக்கள் சீனக் குடியரசு, இந்தியா & இந்தோனேசியா.... இந்த நாடுகளின் ஒட்டுமொத்த சனத்தொகை அண்ணளவாக 2.5 பில்லியன் ஆகும்.

 சராசரியாக ஆசிய நாட்டவரொருவர், வருடாந்தம் 150கிலோகிராம் அரிசியினை நுகர்கின்ற அதேவேளை சராசரியாக ஐரோப்பிய நாட்டவரொருவர், வருடாந்தம் 5கிலோகிராம் அரிசியினையே நுகர்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

 ஆசியாவின் சனத்தொகையில்(3.5பில்லியன்) வருடாந்தம் 50 மில்லியன் அதிகரிப்பு ஏற்படுகின்றது. இதன் காரணமாக அரிசிக்கான தேவை அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.

 ஆசியாவின் நெல் விளைநிலங்களில் ¾ பங்கான நிலங்களில் மேம்படுத்தப்பட்ட நெல்லினங்களே பயிரிடப்படுகின்றது. இதன் காரணத்தினால் ஆசியாவில் அதிகளவில் நெல் உற்பத்தி செய்யப்படுகின்றது.

 ஆசிய நாடுகளில் 250 மில்லியன் விவசாயிகள் நெற்செய்கையில் ஈடுபடுகின்றனர். இவர்களில் அதிகமானோர் 1 ஹெக்டெயருக்கும் குறைவாகவே கொண்டுள்ளனராம்.

 உலகில் அரிசி உற்பத்தியில் ஈடுபடும் 80 நாடுகளுள் தாய்லாந்து, பாகிஸ்தான், வியட்நாம், அமெரிக்கா ஆகிய 4 நாடுகளில் மட்டுமே ஏற்றுமதிக்கான மிகையுற்பத்தி காணப்படுகின்றது.

 உலகில் வெளி நாட்டு வர்த்தகத்திற்காக 5% இற்கும் குறைவான அரிசி உற்பத்தியே கிடைக்கக்கூடியதாக உள்ளது. எனவே எதிர்காலத்தில் சர்வதேச வர்த்தகம் தொடர்பான நம்பிக்கை நிலையற்றதாகவே காணப்படுகின்றது.

 தற்போது ஆபிரிக்க நாடுகளிலும் அரிசியின் நுகர்வில் முன்னேற்றம் காணப்படுவதால் அதிகரிக்கும் கேள்வியினை ஈடுசெய்யும் வகையில் அந்நாடுகள் தமது கண்டத்தினுள்ளேயே அரிசியினை உற்பத்தி செய்து கொள்வதற்கான திட்டங்களை தீட்டியுள்ளன.

 உலகில் வருடாந்தம் உற்பத்தி செய்யப்படுகின்ற அரிசியானது ஒருவருக்கு தலா 65 கிலோகிராம் ஆகும்.

 பெருமளவான ஆசிய மொழிகளில் உணவு, அரிசி ஆசிய சொற்கள் ஒரேமாதிரியான அர்த்தம் கொண்டவையாகும். ( உ+ம் :- சீன மொழியில் அரிசி, உணவு ஆகிய இரண்டும் குறிப்பது ஒரே சொல்லாகும்)

 திருமண நிகழ்வுகளின்போது புதுமணத் தம்பதியினரை அரிசியினால் ஆசிர்வதிப்பது குழந்தைப் பாக்கியம், அதிர்ஷ்டம், செல்வம் ஆகியவற்றுக்கான அடையாளமாகும்.

 அண்மைய ஆய்வுகளின் பிரகாரம், உலக வெப்பமயமாதலின் காரணத்தினால் அரிசி உற்பத்தியானது வீழ்ச்சியடைந்து செல்வதாக குறிப்பிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

 சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவகம் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் அமைந்துள்ளது. இது 1959ம் ஆண்டு, டிசம்பர் 9ம் நாள் ஆரம்பிக்கப்பட்டது.

***





***
Blog Widget by LinkWithin