Tuesday, August 31, 2010

முன்னேற்றப் பாதையில்… 200வது பதிவு .....!!!




ஆம்..... உங்களில் ஒருவனாக லோகநாதனின் பகிர்வுகளினூடாக பதிவுலகில் கால்பதித்து இன்று 200வது பதிவில் உங்களினை சந்திப்பதையிட்டு இரட்டிப்பு மகிழ்ச்சியடைகின்றேன்.

பதிவுலகில் தடம்பதித்த என்னை நண்பர்களின் அன்பான வரவேற்பும், ஒத்துழைப்பும், ஆதரவும் வலையுலகில் என்னை கட்டிப்போட்டு வைத்திருக்கின்றது.

அந்தவகையில் என் வலைப்பூவின் வளர்ச்சிக்கு ஆதரவளித்து உதவுகின்ற சக பதிவர்கள், வாசகர்கள், திரட்டிகள், இணையத்தளங்கள், இணயத்தள சஞ்சிகைகள், பத்திரிகைகள், சஞ்சிகைகள், நலன் விரும்பிகள் அனைவருக்கும் என் நன்றிகளை தெரிவித்துக்கொள்வதில் பூரிப்படைகின்றேன்.



பதிவுலகில் தடம் பதித்து 14 மாதங்களினை அண்மிக்கும் இந்தவேளையில் என் வலைப்பூவினை ருசித்துவிட்டுச் சென்றவர்களின் எண்ணிக்கை 50000+.
[என் வலைப்பூவில் கொடித் தரவினை இணைத்தது பதிவுலகில் தடம் பதித்து 02 மாதங்களின் பின்னரே....]

என் உள்ளம் புத்துணர்ச்சி அடைவதற்கு பதிவுலகம் ஒருவிதத்தில் உறுதுணையாக இருந்துவருவதையிட்டும் திருப்திகொள்கின்றேன்.

என் வலைப்பூக்களில் வெளியாகிய ஆக்கங்களை தொகுத்து நூலுருவாக்க வேண்டும் என்பதே என் அவாவாகும். வாய்ப்புக்கள், உதவிகள், ஒத்தாசைகள் கிடைக்குமாயின் என் கனவு நனவாகும் என எண்ணுகின்றேன்.

மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்........!!!

நன்றிகள்.....!!! வாழ்த்துக்கள்.......!!!

என்றும் உங்கள் அன்பின்
கே.கே.லோகநாதன்


***

Sunday, August 29, 2010

"கிரிக்கெட்டில் 199".....!!!

இது என்னுடைய 199வது பதிவாகும். இந்த 199வது பதிவினை சிறப்பிக்குமுகமாக "கிரிக்கெட்டில் 199" என்கின்ற பதிவினை உங்கள் முன் பகிர்கின்றேன்.

டெஸ்ட் போட்டிகளில் 199 ஓட்டங்களில் ஆட்டமிழந்தவர்கள்

இதுவரை நடைபெற்றுள்ள டெஸ்ட் போட்டிகளில், டெஸ்ட் இன்னிங்ஸ்சில் 199 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து இரட்டைச் சதத்தினை ஒரேயொரு ஓட்டத்தினால் தவறவிட்டவர்கள் வருமாறு....

 முடாசர் நசார்(பாகிஸ்தான் Vs இந்தியா), பைசலாபாத், 1984/85

 முஹமட் அசாருதீன்(இந்தியா Vs இலங்கை), கான்பூர், 1986/87

 MTG எலியட் (ஆஸி Vs இங்கிலாந்து), லீட்ஸ், 1997/98

 சனத் ஜயசூரிய(இலங்கை Vs இந்தியா), கொழும்பு(SSC), 1997/98

 ஸ்ரிவ் வோ(ஆஸி Vs மே.தீவுகள்), பிரிஜ்டவுன், 1999/00

 யூனிஸ் கான்(பாகிஸ்தான் Vs இந்தியா), லாகூர், 2005/06
[199வது ஓட்டத்தில் ரன் அவுட்டான ஒரே வீரர்]

 இயன் பெல்(இங்கிலாந்து Vs தென்னாபிரிக்கா), லோட்ஸ், 2008/09

===================================

இதுவரை நடைபெற்றுள்ள டெஸ்ட் போட்டிகளில், டெஸ்ட் இன்னிங்ஸ்சில் ஆட்டமிழக்காமல் 199 ஓட்டங்களை பெற்ற ஒரேயொருவர் என்ற சாதனைக்குரியவர் தற்போதைய இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் அன்டி பிளவர்[சிம்பாப்வே] மாத்திரமே.


 அன்டி பிளவர் (சிம்பாப்வே Vs தென்னாபிரிக்கா), ஹராரே, 2001/02

***

Friday, August 27, 2010

250 வருட வரலாற்றினைக் கொண்ட Twinkle, Twinkle, Little Star சிறுவர் பாடல்.....!!!

இந்த வருடத்தின் 100வது பதிவு என்ற சிறப்புடன் உங்களை சந்திப்பதையிட்டு அகம் மகிழ்கின்றேன் .......




"Twinkle, Twinkle, Little Star" என்று தொடங்குகின்ற இந்த ஆங்கில பாலர் பாடலானது மிகப் பிரபலமான பாலர் பாடலாகும். குழந்தைகளுக்கான இந்தப் பாடலானது 1761ம் ஆண்டு இயற்றப்பட்ட "Ah ! vous dirai-je, Maman"(Ah! Will I tell you, Mother), என்கின்ற பிரெஞ்சுப் பாடலின் இராகத்திலிருந்து தோற்றம் பெற்றதாகும்.

"Twinkle, Twinkle, Little Star" என்கின்ற இந்த பாடலானது இங்கிலாந்து தேசத்தினைச் சேர்ந்த ஜேன் ரெய்லர் என்பவரால் இயற்றப்பட்டதாகும்.

ஜேன் ரெய்லர் மற்றும் அவரின் சகோதரி ஆன் ஆகியோரினால் 1806 வெளியீடு செய்யப்பட்ட"Rhymes for the Nursery" என்கின்ற நூலில் நட்சத்திரம்[The Star]என்கின்ற தலைப்பில் "Twinkle, Twinkle, Little Star" என்கின்ற இந்த பாடலானது முதன்முதலில் பிரசுரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


அடடா, இந்தப் பாடலினை ஒரு தடவை படித்துப் பாருங்கள்... நீங்கள் கடந்துவந்த குழந்தைப் பருவ நினைவுகள் உங்கள் மனக்கண் முன்னால் வருகின்றதா...???

The Star
Twinkle, twinkle, little star,
How I wonder what you are!
Up above the world so high,
Like a diamond in the sky!
When the blazing sun is gone,
When he nothing shines upon,
Then you show your little light,
Twinkle, twinkle, all the night.
Then the traveler in the dark,
Thanks you for your tiny spark,
He could not see which way to go,
If you did not twinkle so.
In the dark blue sky you keep,
And often through my curtains peep,
For you never shut your eye,
Till the sun is in the sky.
As your bright and tiny spark,
Lights the traveller in the dark,-
Though I know not what you are,
Twinkle, twinkle, little star.



***

Tuesday, August 24, 2010

"6" என்ற பெயரில் ஒரு நகரமா?

 அவுஸ்திரேலியாவின் தேசிய மிருகம் கங்காரு என்பது நாமறிந்ததே... கங்காருக்களில் 50க்கு மேற்பட்ட வகைகள் உண்டாம்.

 கடல் மட்டத்திற்கு கீழே நிலப்பகுதியினைக் கொண்டிராத ஒரே கண்டம் அந்தாட்டிக்கா கண்டமாகும்.




 உலகிலுள்ள எல்லா அணு ஆயுதங்களும் கூட்டாக வெளிப்படுத்துகின்ற சக்தியினை விடவும் அதிகமான சக்தியினை 10 நிமிட சூறாவளி ஏற்படுத்துகின்றதாம்.

 கெட்பிஷ் (பூனை மீன் ~ Catfish) 100,000 சுவை அரும்புக்களைக் கொண்டுள்ளதாம்.
ஆனால் மனிதர்களுக்கு 10,000 சுவை அரும்புகள்தான் உண்டாம்.

 ஆசிய பெண் யானைகளுக்கு தந்தம் இல்லையாம். ஆனால் ஆபிரிக்க பெண் யானைகளுக்கு தந்தம் உண்டாம்.

 ஐக்கிய அமெரிக்காவின் மேற்கு வேர்ஜினியாவிலுள்ள ஒரு நகரமானது "6 " என்றே அழைக்கப்படுகின்றது.

 குளிர் நீரினை விட சூடாக்கிய நீரே நிறை கூடியதாகும்.

 நீல நிறத்தினைப் அடையாளங் காணக்கூடிய ஒரே பறவை ஆந்தை மட்டும்தான்.

 மண்புழுக்கள் 5 இதயங்களைக் கொண்டுள்ளன.

 வேபி ரொபின் பறவைகள், மண்புழுக்களினை விரும்பி உண்ணுமாம். அவை நாளாந்தம் உண்ணும் மண்புழுக்களிள் மொத்த நீளம் சராசரியாக 14அடியளவிலாகும்.




***

Saturday, August 21, 2010

பிரட்மன் 299 Not Out.......!!!



கிரிக்கெட்டின் பிதாமகன் "சேர்" டொனால்ட் பிரட்மன் டெஸ்ட்டில் ஆட்டமிழக்காமல் 299 ஓட்டங்களை பெற்றிருந்தபோது நடைபெற்ற சம்பவம் யாது?....

1931/32 கிரிக்கெட் பருவகாலத்தில் தென்னாபிரிக்க அணியானது அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. இதன்போது அடிலெய்ட்டில் நடைபெற்ற 4வதுடெஸ்ட்டில் ஆஸி அணி 9விக்கட்களை இழந்து 499 ஓட்டங்களை பெற்றிருந்தபோது இறுதி விக்கட்டுக்காக ஜோடி சேர்ந்த பிரட்மன் மற்றும் பட் துர்லோவ் ஆகியோர் 14 ஓட்டங்களை இணைப்பாட்ட பெற்றிருந்தனர். மேலும் ஓட்டமொன்றைப் பெற முனைகையில் பட் துர்லோவ் ரன் முறையில் ஆட்டமிழக்கின்றார். அந்தவேளையில் டொன் பிரட்மன் 299ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் ஆடுகளத்தில் இருந்ததுடன் ஒரு ஓட்டத்தினால் அவரின் முச்சதமும் தவறிப்போய்விட்டது.

பட் துர்லோவ் விளையாடிய ஒரேயொரு டெஸ்ட் போட்டியும் அதுவே.அவரின் மொத்த ஓட்டங்கள் 0. வீழ்த்திய விக்கட்கள் 0.

***

Friday, August 20, 2010

23ம் இலக்க மேலங்கியினை மைக்கல் ஜோர்டான் தெரிவு செய்தது ஏனோ?.......




அமெரிக்க நாட்டினைச் சேர்ந்த மைக்கல் ஜோர்டான் உலகப் புகழ்பெற்ற கூடைப்பந்தாட்ட நட்சத்திரமாவார். கூடைப் பந்தாட்டத்தில் இவர் வெளிப்படுத்திய திறமைகளின் காரணத்தினால் இவரின் பெயர் வரலாற்றில் நீங்காத இடத்தினைப் பெற்றுள்ளது என்பது நாமறிந்ததே.

1963 பெப்ரவரி 17ம் திகதி அமெரிக்காவின் நியூயோர்க்கில் பிறந்த மைக்கல் ஜோர்டான் தான் விளையாடிய போட்டிகளில் 23ம் இலக்க மேலங்கியினை அணிந்தே விளையாடுவார். மைக்கல் ஜோர்டான் 23ம் இலக்க மேலங்கியினை தெரிவு செய்தமை தொடர்பில் சுவையான விடயமொன்றுள்ளது. அது யாது தெரியுமா?.......

ஆரம்ப காலகட்டத்தில், மைக்கல் ஜோர்டான் தான் கல்விகற்ற உயர் பாடசாலையின் கூடைப்பந்தாட்ட அணியில் விளையாட தெரிவுசெய்யப்பட்டபோது அவர் தனது மேலங்கியினுடைய இலக்கமாக தனது அபிமானத்துக்குரிய இலக்கம் 45இனை தெரிவுசெய்தார். ஆனால் தனது உயர் பாடசாலையின் கூடைப்பந்தாட்ட அணியின் வீரரொருவரால் 45ம் இலக்கமானது ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டதன் காரணத்தினால் இலக்கம் 45இன் அரைவாசியினை தன் இலக்கமாக தெரிவுசெய்ய விரும்பினார். அதன்படி இலக்கம் 45இனது அரைவாசி 22.5 ஆகும். இந்த எண்ணினை முழுஎண்ணாக மாற்றி தனது மேலங்கியின் எண்ணை 23ஆக மைக்கல் ஜோர்டான் தெரிவுசெய்தார்.

இந்த 45ம் இலக்க மேலங்கியின் சொந்தக்காரர் வேறுயாருமல்ல மைக்கல் ஜோர்டானின் மூத்த சகோதரர் லரி அவர்களேதான்.

மைக்கல் ஜோர்டான் கூடைப்பந்தாட்டத்திலிருந்து ஓய்வுபெறும்வரை, தான் கல்வி கற்ற உயர் பாடசாலை, கல்லூரி, தொழில்ரீதியான கழக போட்டிகளின்போதும் அதிகமாக 23ம் இலக்க மேலங்கியினையே அணிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.



அமெரிக்காவின் பிரபல கூடைப்பந்தாட்ட கழகங்களில்[Chicago Bulls~ சிக்காக்கோ வுல்ஸ்(1984-93, 1995-98) & Washington Wizards ~வாஷிங்டன் விசாட்ஸ்(2001-2003)] பங்கேற்று தன் திறமைகளினை வெளிக்காட்டிய மைக்கல் ஜோர்டான் விளம்பரங்கள்மூலமும் அதிகம் சம்பாதித்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதற்கு எடுத்துக்காட்டாக; மலேசியாவிலுள்ள "நைக்" தொழிற்துறை தொழிலாளர்கள் வருடாந்தம் ஒட்டுமொத்தமாக பெற்ற தொகையிலும் அதிகமாக, "நைக்" நிறுவனத்திடமிருந்து தனது அணுசரனைக்காக மைக்கல் ஜோர்டான் பணத்தினைப் பெற்றுக்கொண்டார்.

1984ல் அமெரிக்க லொஸ் ஏஞ்சல் மற்றும் 1992ல் ஸ்பெய்ன் பார்சிலோனாவில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டியில், அமெரிக்க கூடைப்பந்தாட்ட அணியில் பங்கேற்று மைக்கல் ஜோர்டான் தங்கப்பதக்கம் வென்றார்.

மைக்கல் ஜோர்டானின் கூடைப்பந்தாட்டத்தில் வெளிக்காட்டிய திறமைகள்ன் காரணத்தினால் அவரின் செல்லப்பெயர் எயார் ஜோர்டான்["Air Jordan" ] என்பதாக நிலைத்துவிட்டது.

***

Tuesday, August 17, 2010

99 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் ஒருநாள் போட்டியில் பெற்றவர்கள்....!!!




இலங்கை, இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையில் இலங்கையில் நடைபெற்றுவருகின்ற முத்தரப்பு ஒருநாள் தொடரில் நேற்று பகலிரவுப் போட்டியாக இலங்கை, இந்திய அணிகளுக்கிடையிலான போட்டியில் இந்திய அணி 6விக்கட் வித்தியாசத்தில் இலகு வெற்றி பெற்றமை நீங்கள் அறிந்ததே... இந்தப் போட்டியானது இலங்கை அணி தனது சொந்த மண்ணில் அதிக பந்துகள்(93பந்துகள்) வித்தியாசத்தில் தோல்வியடைந்த சர்வதேச ஒருநாள் போட்டி என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

171ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய இந்திய அணியின் சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் விரேந்தர் சேவாக் 99ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் விசேட அம்சம் யாதெனில் சுராஜ் ரன்டீவ் 35வது ஓவரினை வீசிய அழைக்கப்பட்டபோது சேவாக் 99ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார். முதல் பந்தில் உதிரியாக 4 ஓட்டங்கள் பெறப்பட இந்திய அணி 1 ஓட்டத்தினைப் பெற்றால் வெற்றி என்ற நிலையிருந்தது. 2வது,3வது பந்தினை சேவாக் தடுத்தாட, 4வதாக வீசப்பட்ட பந்து நோ போலாக[No Ball] வீசப்பட அந்த பந்தில் சேவாக் 6ஓட்டங்களைப் பெற்றாலும் நோ போலுடன் வெற்றி இலக்கு எட்டப்பட சேவாக் 99ஓட்டங்களை மாத்திரமே பெற்றதாக அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். இந்த நிகழ்வானது மிக "அரிய" நிகழ்வாக ஒருநாள் சரித்திரத்தில் பதிவாகியமை குறிப்பிடத்தக்கதாகும்.


ஒருநாள் போட்டியில் 99 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றவர்கள்....


புருஸ் எட்கர்(நியூசிலாந்து Vs இந்தியா), ஒக்லண்ட், 1980/81

டீன்ஸ் ஜோன்ஸ்(ஆஸி Vs இலங்கை), அடிலய்ட், 1984/85

ரிச்சி ரிச்சர்ட்சன்(மே.தீவுகள் Vs பாகிஸ்தான்), சார்ஜா, 1985/86

அன்டி பிளவர்(சிம்பாப்வே Vs ஆஸி), ஹராரே, 1999/00

அலிஸ்ரெயர் கெம்பல்(சிம்பாப்வே Vs நியூசிலாந்து), புளவாயோ, 2000/01

ராம் நரேஷ் சர்வான்(மே.தீவுகள் Vs இந்தியா), அஹமதாபாத், 2002/03

பிறொட்ஜ் ஹொட்ஸ்(ஆஸி Vs நியூசிலாந்து), மெல்பேர்ன், 2006/07

முஹமட் யூசுப்(பாகிஸ்தான் Vs இந்தியா), குவாலியூர், 2007/08

மைக்கல் கிளார்க்(ஆஸி Vs இங்கிலாந்து), ஓவல், 30.06.2010

விரேந்தர் சேவாக்(இந்தியா Vs இலங்கை), தம்புள்ளை, 16.08.2010

சிறப்பம்சங்கள்:

 புருஸ் எட்கர், டீன்ஸ் ஜோன்ஸ், அன்டி பிளவர், ராம் நரேஷ் சர்வான், மைக்கல் கிளார்க் ஆகியோர் 99 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றபோது முழுமை ஓவர்களும் பந்துவீசி முடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

 ரிச்சி ரிச்சர்ட்சன், அலிஸ்ரெயர் கெம்பல் ஆகியோர் தமது 99வது ஓட்டத்தினை ஆட்டமிழக்காமல் பெற்றபோது அணியின் வெற்றி இலக்கினையும் அடைந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 இதுவரையும் 31 துடுப்பாட்ட வீரர்கள் 99 ஓட்டங்களை ஆட்டமிழந்தோ/ ஆட்டமிழக்காமலோ ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பெற்றுள்ளனர்.

***

Sunday, August 15, 2010

உலகின் முதல் கருங்கற் கோயில்…..!!!




உலகில், முதன்முதலில் முற்றுமுழுதாக கருங்கற்களினைக் கொண்டு அமைக்கப்பட்ட ஆலயமாக தமிழ்நாட்டில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தஞ்சைப் பெரிய கோயில் விளங்குகின்றது.

தஞ்சைப் பெரிய கோயிலின் கட்டுமானப் பணிகள் 1006ம் ஆண்டு தொடங்கி 1010ம் ஆண்டில் முடிக்கப்பட்டதாக வரலாற்றுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

10ம் நூற்றாண்டுக் காலத்தில் சோழப் பேரரசு அதன் உச்ச நிலையில் இருந்தபோது, இராஜராஜ சோழ மன்னனால் பெரிய கோயில் கட்டப்பட்டது. தொடக்கத்தில் இராஜராஜேஸ்வரம் எனவும் பின்னர், நாயக்கர்கள் தஞ்சையை ஆண்ட காலத்தில் தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றும் அழைக்கப்பட்டது. 17 மற்றும் 18ம் நூற்றாண்டுகளில் மராட்டிய மன்னர்களால் தஞ்சை ஆளப்பட்டபோது, பிருகதீசுவரம் ஆனது.



தஞ்சைப் பெருவுடையார் கோயில், ஐக்கிய நாடுகள் கல்வி, விஞ்ஞான மற்றும் பண்பாட்டு நிறுவனத்தால்[யுனெஸ்கோ] உலகப் பாரம்பரியச் சின்னமாக 1987ம் ஆண்டு அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில், தஞ்சைப் பெரிய கோயிலின் 1000 ஆண்டு நிறைவு விழா செப்டம்பர் 25,26ம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

***

இனிய சுதந்திரத் தின நல்வாழ்த்துக்கள் !





இன்று இந்தியாவின் 64வது சுதந்திர தினமாகும்...

***

Thursday, August 12, 2010

ஒலிம்பிக்கில் ஸ்டெல்லா வோல்ஷ்சின் பெயர் முக்கியத்துவம் பெறுவது ஏனோ?...



போலந்து நாட்டினைச் சேர்ந்த ஸ்டெல்லா வோல்ஷ்[Stanislawa Walasiewicz ~ ஸ்ரன்ரிசலா வலசிவிக்ஸ் எனவும் அழைக்கப்பட்டவர்], 1932ம் ஆண்டு லொஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டியில் மகளிருக்கான 100மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப்பதக்கத்தினை சுவீகரித்தார். ஒலிம்பிக் மகளிர் 100மீற்றர் ஓட்டப் போட்டியில் 11.9செக்கன் என்ற நேரப் பெறுதியில்[இந்த நேரப் பெறுதி அப்போதைய உலக சாதனையாகும்] ஓடி சாதனை புரிந்த முதல் மகளிர் ஸ்டெல்லா வோல்ஷ் ஆவார்.

ஸ்டெல்லா, 1936ம் ஆண்டு பேர்லின் ஒலிம்பிக் போட்டியில் மகளிருக்கான 100மீற்றர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப்பதக்கத்தினை சுவீகரித்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

ஸ்டெல்லா 1980ம் ஆண்டு டிசம்பர் 4ம் திகதி நிகழ்ந்த திருட்டுச் சம்பவமொன்றின்போது அமெரிக்க நாட்டின் கிளிவ்லண்ட், ஒஹாயோவிலுள்ள பொருட்கொள்வனகமொன்றில் தனது 69வது வயதில் பரிதாபகரமாக சுட்டுக் கொலைசெய்யப்பட்டார். ஸ்டெல்லா தொடர்பான பிரேதப் பரிசோதனையின் முடிவுகள் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்ததாம். ஏனெனில் பால்நிலை சோதனையில் ஸ்டெல்லா, பெண் தன்மையினை விடவும் ஆண் தன்மையினையே அதிகம் கொண்டிருந்தார் என்பது தெரியவந்ததாம். இதனால் அவரின் நாமம் "Stella the Fella." என்ற செல்லப்பெயரில் புகழ்பெற்றுவிட்டது. [Fella ~ ஆடவர்]

ஸ்டெல்லா அமெரிக்க பிரஜாவுரிமை பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.


தன்னுடைய வாழ்நாளில் ஸ்டெல்லா, 100 தேசிய மற்றும் உலக சாதனைகளினை நிலைநாட்டினார். இதில் 51 போலந்து சாதனைகளும், 18 உலக சாதனைகளும், 8 ஐரோப்பிய சாதனைகளும் உள்ளடங்கும்.

***

Tuesday, August 10, 2010

இரத்தக்களரி வைரங்கள்....!!!

லைபீரிய நாட்டின் முன்னாள் ஜனாதிபதி சார்ள்ஸ் டெய்லர் யுத்த குற்றங்களுக்காக ஐ.நா குற்றவியல் நீதிமன்று முன் ஆஜர்படுத்தப்பட்டுள்ளமை நாம் அறிந்த தகவலே.

இவர் மீதான குற்றச்சாட்டுகளில், சியாராலியோன் நாட்டின் ஆயுதக்குழுக்களுக்கு சட்டவிரோதமாக ஆயுதங்களினை வழங்கி அதற்கு பிரதியுபகாரமாக இரத்தக்களரி வைரக்கற்களினைப்[Blood Diamonds] பெற்றுக்கொண்டாராம் என்கின்ற குற்றச்சாட்டும் உள்ளடங்குகின்றது.


நீதிமன்றில் நவோமி கம்ப்பெல்

1992-2002ம் ஆண்டுவரை நடைபெற்ற சிவில்யுத்தத்தில் 100,000க்கு மேற்பட்டோரின் மரணத்துக்கு சார்ள்ஸ் டெய்லரே காரணம் என அவர்மீது 11 யுத்தக்குற்றங்கள் சுமத்தப்பட்டு 2006ம் ஆண்டுமுதல் ஐ.நா குற்றவியல் நீதிமன்றில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். யுத்தக் குற்றங்களுக்காக ஐ.நா குற்றவியல் நீதிமன்று முன் நிறுத்தப்பட்ட ஆபிரிக்க நாடொன்றின் முதல் முன்னாள் தலைவர் சார்ள்ஸ் டெய்லர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.


சார்ள்ஸ் டெய்லர்


இந்த வழக்கின் திருப்புமுனையாக பிரித்தானிய மொடல் அழகி நவோமி கம்ப்பெல் நெதர்லாந்து நாட்டில் அமைந்துள்ள சியாராலியோனுக்கான ஐ.நா விசேட நீதிமன்றில் ஆகஸ்ட் 5ம் திகதி சாட்சியமளித்தார். லைபீரிய நாட்டின் முன்னாள் ஜனாதிபதி சார்ள்ஸ் டெய்லர், பிரித்தானிய மொடல் அழகி நவோமி கம்ப்பெலுக்கு தென்னாபிரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் தொண்டுப்பணிக்கு நிதிதிரட்ட 1997ம் ஆண்டு தென்னாபிரிக்கா சென்றபோது டெய்லர், நவோமிக்கு வைரக்கற்களினை இரகசியமாக வழங்கினாராம். குறிப்பிட்ட அந்த வைபவத்தின்போது சார்ள்ஸ் டெய்லரும், நவோமி கம்ப்பெலும் அருகருகே அமர்ந்திருந்ததாக சர்வதேச ஊடகங்களில் தற்சமயம் செய்திகள் வெளியிட்டுள்ளன.

இதுதொடர்பில் நீதிமன்றில் சாட்சியமளித்த நவோமி கம்ப்பெல் தனக்கு சிறிய அழுக்கான வைரங்கள் இரகசியமாக வழங்கப்பட்டதாகவும் ஆனால் அவை யாரால் வழங்கப்பட்டது என்பது தனக்குத் தெரியாது எனவும் கூறினார். ஆனால் நவோமியின் உதவியாளர்களோ டெய்லர்தான் இந்த வைரக்கற்களினை தனக்கு வழங்கியதாக நவோமி தங்களிடம் தெரிவித்ததாக நீதிமன்றில் வாக்குமூலம் வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

நவோமி தனக்கு பரிசளிக்கப்பட்ட இந்த வைரங்களினை தென்னாபிரிக்காவிலுள்ள குழந்தைகள் நல நிதியமொன்றுக்கு கையளித்தமை குறிப்பிடத்தக்கதாகும். அந்த குழந்தைகள் நல நிதிய இயக்குனர் தற்சமயம் அந்த வைரங்களினை தென்னாபிரிக்க பொலிசாரிடம் விசாரணைகளுக்காக கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.



ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு இயற்கையாகவே அமைந்த வளங்களினை தமது நாட்டுக்காக, தமது மக்களின் வறுமையினை இல்லாமல் செய்வதற்கு பயன்படுத்தாமல் அதிகாரத் தரப்பினரின் ஆதரவுடன் தமது சொந்த நலனுக்காக சட்டவிரோதக்கும்பல்கள் பயன்படுத்திவருகின்றனர் எனக் குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்படுகின்றன. அந்தவகையில் ஆபிரிக்க கண்டத்தினைச் சேர்ந்த பல நாடுகளில் வைரம் போன்ற விலைமதிப்பற்ற செல்வங்களுக்காக இரத்தக்களரிகள் நீடித்துவருகின்றமை கவலைதரும் செய்தியாகும்.

***

Saturday, August 7, 2010

உலகப் புகழ்பெற்ற கோஹினூர் வைரம்....!!!



பிரிட்டிஷ் அரச குடும்பத்துக்கு சொந்தமான நகைகளில் மிக முக்கியமானதாக விளங்கும் உலகின் மிகப் பிரபலமான வைரங்களில் ஒன்று என்று சொல்லப்படுகின்ற கோஹினூர் வைரம் யாருக்குச் சொந்தம் என்கின்ற விவாதமானது பல ஆண்டுகளாக இருந்துவருகின்றது.

இந்த வைரம் பற்றிய பதிவுகள் 13ஆம் நூற்றாண்டிலிருந்து இருந்துவருகின்றன. இந்தியா, பாரசீகம், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் ஆட்சி செய்த மன்னர்களிடம் இந்த வைரம் கைமாறி வந்துள்ளது.

1849ல் பிரிட்டிஷ்ஷார் பஞ்சாப்பைக் கைப்பற்றிய வேளையில் லாகூரின் கஜானாவில் இருந்துவந்த இந்த வைரம் அப்போதைய பிரிட்டிஷ் மகாராணியார் விக்டோரியாவிடம் கையளிக்கப்பட்டிருந்தது.

கோஹினூர் வைரமானது ஆரம்பகாலத்தில்(இந்தியா, பாரசீகம் மன்னர்களின் ஆட்சிக்காலத்தில்) 186 கரட் பெறுமதியினைக் கொண்டு நீள்வட்ட வெட்டு வடிவமுடையதாகவிருந்தது.(அதாவது சிறிய கோழி முட்டையினை ஒத்த வடிவம் மற்றும் அளவு).

பட்டை தீட்டப்பட்டு தற்சமயம் 108.93 கரட் பெறுமதியினைக் கொண்டுள்ள கோஹினூர் வைரமானது டவர் லண்டன் அருங் காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

கோஹினூர் வைரமானது, இந்தியாவின் கொல்லூர் சுரங்கத்தில், ரேயலசீமா(ரேயலசீமா என்றால் கற்களின் நிலம் என்ற பொருளாம்) வைரக்கல் சுரங்கத்தில் அகழ்ந்தெடுக்கப்பட்டதாம். கோஹினூர் வைரமானது ஒரு அரச பரம்பரையிலிருந்து அடுத்த பரம்பரைக்கு கைமாற்றாகி வந்தது. இந்த வைரத்தின் உண்மையான பெயர் "சமாண்டிக் மனி" என்பதாகும்.

1739ல் பாரசீக மன்னர் நடீர் ஷா, இந்தியாவினை ஆக்கிரமித்தபோது இந்தவைரத்தினை "ஒளியின் மலை" என்று வர்ணித்திருந்தாராம். "ஒளியின் மலை" என்பதற்கான பாரசீக-அரபுப் பதமானது "கோஹினூர்" என்பதாகுமாம்.

"கோஹினூர்" வைரம் தொடர்பில் ஒரு வழிவந்த வரலாறு உள்ளதாம், அது யாதெனில்; "எவன் இந்த வைரத்தினை வைத்திருக்கின்றானோ அவன் இந்த உலகத்தினை ஆள்வான். ஆனால் இதன் துரதிஷ்டம் யாதெனில் கடவுள் அல்லது ஒரு பெண் மட்டுமே இதனை அணிந்துகொள்ளலாம் என்பதாகும்".



"கோஹினூர்" வைரத்தினை உரிமையாக வைத்திருந்த அரசர்களின் வாழ்க்கையினை நோக்கினால் அவர்களின் வாழ்வில் வன்முறைகள், மரணங்கள், பெளதிக மற்றும் உள தாக்கங்களே நிறைந்துள்ளதால் என்னவோ, பிரிட்டிஷ் மகாராணிகளில் இதுவரை விக்டோரியா மகாராணி மாத்திரமே "கோஹினூர்" வைரத்தினை அணிந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

1937ம் ஆண்டு இந்த வைரமானது தற்சமயம் பிரிட்டிஷ் மகாராணியாக பதவிவகிக்கும் எலிஷபெத் மகாராணியாரின் முடிசூட்டும் விழாவின்போது அவரிடம் கையளிக்கப்பட்டது.

இந்திய அரசாங்கமானது "கோஹினூர்" வைரத்தினை தம்மிடம் கையளிக்குமாறு பிரிட்டிஷ் அரசாங்கத்தினை பலதடவைகள் கேட்டுக்கொண்டாலும் அதற்கு பதவிவகித்த எந்தவொரு பிரிட்டிஷ் அரசாங்கமும் ஒத்துக்கொள்ளவில்லை என்பதிலிருந்து அதன் மகிமையினை புரிந்துகொள்ளமுடிகின்றது அல்லவா?.......

***

Thursday, August 5, 2010

ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரேயொரு முறை நிகழ்த்தப்பட்ட சாதனை......

ø சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் அறிமுகமாகி 40 ஆண்டுகளை அண்மிக்க இந்த தருணத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரேயொரு முறை நிகழ்த்தப்பட்ட சாதனை தொடர்பான திவு.....
÷ சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியொன்றில் இரண்டு பந்துவீச்சாளர்கள் தலா 05விக்கட்கள் வீதம் கைப்பற்றிய நிகழ்வானது ஒரேயொரு முறையே நடந்துள்ளது என்பது ஆச்சரியமான விடயமே.......

ö 1977ம் ஆண்டு பருவகாலத்தில் இங்கிலாந்து அணியானது அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்து எட்ஸ்வஸ்டனில் மோதிய ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியினை, அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சாளர்கள் துவம்சம் செய்தனர். இதில் ஆஸியின் கிரேக் செப்பல் 20 ஓட்டங்களுக்கு 5 விக்கட்களினையும், கெரி கோசியர் 18 ஓட்டங்களுக்கு 5 விக்கட்களினையும் கைப்பற்றி சாதனை படைத்தனர். இதுவே, ஒருநாள் கிரிக்கெட் போட்டியொன்றில் இரண்டு பந்துவீச்சாளர்கள் தலா 05விக்கட்கள் வீதம் கைப்பற்றிய நிகழ்வாக பதிவாகியுள்ளது.

ஆனால், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் போட்டியொன்றில் இரண்டு பந்துவீச்சாளர்கள் தலா 05விக்கட்கள் வீதம் கைப்பற்றியது 52 நிகழ்வுகள் பதிவாகியுள்ளன.... இதில் இறுதி சந்தர்ப்பமாக இந்திய அணி, பங்களாதேஷ்சில் மோதிய டெஸ்ட்டில் பங்களாதேஷ்சின் பந்துவீச்சில் சஹடாட் ஹொசைன் 5/71 மற்றும் சஹீப் அல் ஹசன் 5/62 பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

==============================


உலகக் கிண்ண கிரிக்கெட் ~ 2010 ஞாபகார்த்த குறியீட்டுச் சின்னம்......



இலங்கை,இந்தியா,பங்களாதேஷ்சில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் ~ 2010க்கான ஞாபகார்த்த சின்னம் அண்மையில் இலங்கையில் உத்தியோகபூர்வ வெளியிடப்பட்டது.
இந்த குறியீட்டுச் சின்னத்துக்கு "ஸ்டம்பி[Stumpy]" என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

=============================

வீரகேசரி நாளிதழுக்கு அகவை "80".....!!!




இலங்கையின் முன்னணி தமிழ் நாளிதழ் "வீரகேசரி"
நாளை[06-08-2010] அகவை எண்பதில் தடம் பதிக்கின்றது.

அமுத விழா கொண்டாடும் "வீரகேசரி" நாளிதழுக்கு வாழ்த்துக்கள்.............

***

Tuesday, August 3, 2010

குரைக்க முடியாத ஒரே நாயினம்..........

õ உலகளாவியரீதியில் மனிதனின் செல்லப் பிராணிகளில் நாய்களே முதலிடத்தினைப் பெறுகின்றன என்பது நாமறிந்த தகவலே....

பொதுவாக நாய்களின் நாக்குகள் பிங்க்(Pink) நிறமாகும். ஆனால் செளவ் செளவ் [Chow Chow] & ஷர் பெய் [Shar-pei] ஆகிய நாயினங்களின் நாக்குகள் கறுப்பு நிறமானவையாம்...

உலகிலுள்ள நாயினங்களில் குரைக்க முடியாத ஒரே நாயினம் வெசென்ஜி [Basenji]...



உலகில் எல்லா சீதோஷ்ண காலநிலைகளிலும் வாழக்கூடிய ஒரே உயிரினம் நாய்தான்.....


===========================================



தபால்களினை விநியோகிக்க உதவிய பூனைகள்.....



ï தபால் போக்குவரத்துக்கள் தோற்றம் பெற்ற காலகட்டத்திலும், அதன் பிற்பாடும் தபால்களினை மக்களிடையே விநியோகிக்க பல்வேறுபட்ட உயிரினங்கள்(ஒட்டகங்கள்,குதிரைகள், மான்கள்[Reindeer],நாய்கள்,புறாக்கள்) பயன்படுத்தப்பட்டன என்பது நாமறிந்ததே.

1879ம் ஆண்டு காலகட்டத்தில் பெல்ஜியத்தின், லீச்சில் தபால் பொதிகளினை கிராமங்களுக்கு எடுத்துச் செல்வதற்காக 37 பூனைகள் வேலைக்கு அமர்த்தப்பட்டனவாம். இந்தச் சேவையானது நீண்ட காலத்துக்கு நிலைக்கவில்லையாம்.


***

Sunday, August 1, 2010

நீர் சொட்டும் அதிசய மரம்

இந்தியாவில் அமைந்துள்ள, தாமிரபரணியின் துணை நதியான பாண தீர்த்தத்திலிருந்து 5 கிலோமீற்றருக்கு அப்பால் அதிசய மரமொன்று உள்ளதாம். இரவில் இந்த மரத்தின் இலையிலிருந்து சுரக்கும் தண்ணீர் மரத்தின் அடியில் நிற்பவரின் ஆடையினை நனைத்துவிடுகின்றதாம். இந்த மரம் மகிசவர்த்தினி மரம் என்றழைக்கப்படுகின்றது. இந்த மரத்தில் தண்ணீர் சொட்டுவதற்கு விஞ்ஞான காரணமுள்ளது. அதாவது இந்த மரம் ஒளிச்சேர்கையின்போது நீர்ச் சத்தினை உள்ளெடுத்துக்கொண்டு இரவு தன் தேவைக்கு மிகுந்த நீரை வெளியேற்றுகின்றதாம்.


***

சில சுவையான தகவல்கள் ........

☼ உயிருள்ள தாவரங்கள் எப்பொழுதும் வளர்ச்சியடைந்துகொண்டே இருக்குமாம்.

☼ பெரிய மரமொன்றானது நாளாந்தம் 400 கலனுக்கும் அதிகமான நீரினை வளிமண்டலத்துக்கு வெளியேற்றுகின்றதாம்.

☼ உலகத்துக்கு தேவையான 20%க்கும் அதிகமான ஒட்சிசன் வழங்கலினை அமேசன் மழைக்காடுகளே உற்பத்தி செய்கின்றனவாம்.




***

15 வருடங்களின்பின் பாகிஸ்தானுக்கு விடிவு கிடைத்தது.....

அண்மையில் இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்த அவுஸ்திரேலிய மற்றும் பாகிஸ்தான் இடையேயான டெஸ்ட் தொடர் 1-1 என சமநிலையில் நிறைவடைந்தது. அதில் 2வது டெஸ்ட்டில் வெற்றி பெற்றதன்மூலம் பாகிஸ்தான் 15வருடங்களின்பின் ஆஸியினை தோற்கடித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

1995ம் ஆண்டே பாகிஸ்தான், ஆஸியினை இறுதியாக டெஸ்ட் போட்டியொன்றில் வெற்றி கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

3வது டெஸ்ட் – சிட்னி, நவம்பர் 30 - டிசம்பர் 4, 1995
(பாகிஸ்தான் 299 & 204; ஆஸி 257 & 172) பாகிஸ்தான் 74 ஓட்டங்களால் வெற்றி.....


ஆஸி அணியானது, பாகிஸ்தான் அணியினை 13 டெஸ்ட் போட்டிளில் தொடர்ச்சியாக வெற்றிபெற்று புதிய சாதனை படைத்தது. முன்னதாக இலங்கை, பங்களாதேஷ்சினை 12 டெஸ்ட்களில் தொடர்ச்சியாக வெற்றிபெற்றமையே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

அவுஸ்திரேலிய மற்றும் பாகிஸ்தான் அணிகளிடையேயான டெஸ்ட் தொடர்கள் தொடர்பிலான என்னுடைய முன்னைய பதிவு.........

அந்தப் பதிவின் இறுதிப் பாகம்......

இங்கிலாந்து மண்ணில் அவுஸ்திரேலிய மற்றும் பாகிஸ்தான்
(2010/11)

1வது டெஸ்ட் – லோட்ஸ் மைதானம், ஜூலை13-16,2010
ஆஸி 1வது இன்னிங்ஸ் – 253
பாகிஸ்தான் 1வது இன்னிங்ஸ் – 148
ஆஸி 2வது இன்னிங்ஸ் – 334
பாகிஸ்தான் 2வது இன்னிங்ஸ் – 289

ஆஸி 150 ஓட்டங்களால் வெற்றி

2வது டெஸ்ட் – லீட்ஸ், ஹெடிங்லே, ஜூலை 21-24,2010
ஆஸி 1வது இன்னிங்ஸ் – 88
பாகிஸ்தான் 1வது இன்னிங்ஸ் –258
ஆஸி 2வது இன்னிங்ஸ் – 349
பாகிஸ்தான் 2வது இன்னிங்ஸ் – 180/7

பாகிஸ்தான் 3 விக்கட்களால் வெற்றி

***
Blog Widget by LinkWithin