Monday, October 5, 2009

அறிஞர் சோக்ரடீஸின் இறுதித் தருணம்



தான் கொண்ட கொள்கையின் நிமித்தம் கொல்லப்பட்டவர்களில் ஒருவர் தான் அறிஞர் சோக்ரடீஸ். அவர் விசம் ஊட்டி கொல்லப்படுவதற்கு முன்பாக அவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகின்றார். விசாரணையின் போது தலைமை நீதிபதி அவரிடம் “நான் பெரும்பான்மையான மக்களோடு ஒத்துப்போக வேண்டியது குறித்து வருந்துகின்றேன். அவர்கள் அனைவரும் உன்னைக் கொல்ல விரும்புகின்றார்கள். நீயோ புதுமையானவனாக இருக்கிறாய். நான் உன்னை மரணதண்டனையின்று தப்புவிப்பதற்காக மூன்று மாற்று வழிகளைக் கொடுத்தும் அவ்ற்றை நீ ஏற்றுக்கொள்வதாக இல்லை ” என்று சொன்னார். தலைமை நீதிபதி சோக்ரடீஸ் மீது மிகப்பெரிய மரியாதை வைத்திருந்தார்.

“அவன் இளைஞர்களின் மனதைக் கெடுத்துக் கொண்டிருப்பதால், கொல்லப்பட வேண்டும். நம்முடைய பாரம்பரியங்களுக்கும், நம்முடைய மார்க்கத்துக்கும் விரோதமாக அவன் அவன் அவர்களுது எண்ணங்களைக் தூண்டிவிடுகின்றான். பழமையானதும்,பூர்வீகமானதுமான நம்முடைய நம்பிக்கைகளில் இளைஞர்களை சந்தேகம் கொள்ள வைக்கின்றான். நம்முடைய பூர்வீக வேதங்களில் அப்படியே நம்பிக்கை கொள்ளச் செய்யாமல் அவர்கள் தாங்களாகவே உண்மையை தேடிக் கண்டுபிடிக்க ஏதுவாக இருக்கின்றான். இந்த மனிதன் அழிக்கப்பட வேண்டும்” என பெரும்பான்மையான மக்கள் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தனர்.

தலைமை நீதிபதி கூறியது “முதலாவது எளிமையான அவகாசம்: நீ ஏதென்ஸ் நாட்டை விட்டு வெளியேறி, நாட்டு எல்லைக்கு அப்பால் உனது கல்விச்சாலையை ஏற்படுத்திக்கொள்ளலாம் என்பது. அங்கே யாரெல்லாம் கற்றுக்கொள்ள விரும்புகின்றார்களோ, அவர்கள் அங்கே வரக்கூடும்”.

அதற்கு சோக்ரடீஸ் பதில்:“அது எனது மரண பயத்தைக் காட்டும்.விரைவில் நான் எப்படியும் மரிக்கத்தான் போகின்றேன். ஆகவே சில ஆண்டுகளுக்கு ஏதென்ஸ் நாட்டை விட்டு வெளியே சென்று இருக்க வேண்டும் என்ற உங்களது யோசனையை நான் ஆதரிக்க முடியவில்லை. பயத்தினிமித்தமாக நான் செயல்பட முடியாது. அதைவிட நான் மரணத்தை ஏற்றுக்கொள்கின்றேன். ஏனென்றால் நீங்கள் என் சரீரத்தைத்தான் கொல்ல முடியுமே, தவிர என்னுடைய ஆவியை அல்ல” என்றார்.

தலைமை நீதிபதி கூறியது: “ இரண்டாவது மாற்றுவழி என்னவென்றால், சீர்திருத்தம் குறித்துப் பேசமாட்டேன் என்றும், அதைப் போதிக்கமாட்டேன் என்றும் நீ வாக்களித்தால், நீ ஏதென்ஸ் நாட்டில் வாழ்ந்துகொள்ளலாம்.”

அதற்கு சோக்ரடீஸ் பதில்: “ அப்படியானால் நான் வாழ்ந்திருப்பதில் என்ன பயன்? எனக்கு கொள்கையானது ஜீவனைக் காட்டிலும் மேலானது. ஜீவன் வரும் போகும், சத்தியமோ நிலைத்திருக்கின்றது.”

தலைமை நீதிபதியின் பதில்: “அப்படியானால் இறுதியாக உனக்குச் சொல்லும் வழி எதுவென்றால், மக்களின் மனங்களை புண்படுத்தியதற்காக “ நான் மனம் வருந்துகின்றேன்” என்று நீ சொல்வதுதான். சாதாரணமாக ஓர் எளிமையான உன்னுடைய மன்னிப்புக் கோரலின் மூலமாக நான் உன் பட்சத்தில் சார்ந்து, உன்னை விசம் கொடுத்துக் கொல்லும் இந்த மோசமான நிலையிலிருந்து , நீ விடுதலை செய்யப்பட முடியும்”.

அதற்கு சோக்ரடீஸின் இறுதியான பதில்: “ நான் எந்தவித குற்றமும் செய்யவில்லை. “ நான் மனம் வருந்துகின்றேன்” என்று சொல்ல முடியாது. நான் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன். என்னை விசம் கொடுத்துக் கொல்வதால் பல நூற்றாண்டுகளுக்குப் நீங்கள் பழித்துப் பேசப்படுவீர்கள். நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய காரியம் என்னவென்றால், எனக்கு மரணத்தீர்ப்பு கொடுத்த காரணத்தினாலேயே, உங்களுடைய பெயர்கள் நினைவுகூரப்படும். இல்லாவிடில் வேறு எவரும் உங்களை நினைவு கூரமாட்டார்கள்”.

இறுதியில் அறிஞர் சோக்ரடீஸ் விசமூட்டிக் கொலை செய்யப்படுகின்றார். ஆம், தான் கொண்ட கொள்கையின் நிமித்தம் அறிஞர் சோக்ரடீஸ் கொல்லப்பட்டாலும் இன்றுவரை அறிஞர் சோக்ரடீஸினுடைய புகழ் உலகம்பூராகவும் பரவியுள்ளது என்றால் அது மிகையல்ல எனலாம்.

***

No comments:

Blog Widget by LinkWithin